10 செப்டம்பர் …..என் முகநூல் பதிவு

முன்னாள் சினிமா தயாரிப்பாளர் ஒருத்தரோட பேசவேண்டிய சூழல்.

அவரும் ஒரு இயக்குநரும் சேர்ந்து சில வெற்றிப்படங்களைக் கொடுத்தார்கள் .

ஒரு காலகட்டத்தில் பிரிந்து தனித்தனியாக படங்கள் பண்ணினாங்க, ஆனா இருவரும் அதிகம் சோபிக்கவில்லை

இந்தத் தயாரிப்பாளர் சில படங்கள் விநியோகம் செய்து ஓரளவு தேறினார் . அந்த இயக்குநர் சில படங்களோடு ஒதுங்கிக் கொண்டார்.

பேசிட்டிருக்கும்போது அந்தத் தயாரிப்பாளர் சொன்ன ஒரு விஷயத்த இங்க பகிரலாம்னு தோணுச்சு

‘நாங்க ரெண்டுபேரும் தனிப்பட்ட முறையில முன்கோபக்காரர்கள், அதே நேரம் மிகத் திறமையானவர்கள் . அவர் கொண்டுவரும் க்ரியேட்டிவ் ப்ராடக்ட் நல்லா வரணும்னு ரெண்டு பேரும் போட்டி போட்டு விட்டுக்கொடுக்காம உழைப்போம். வெளில அடிச்சுக்கற மாதிரி தெரியும் , ஆனா எங்களுக்குள்ள அப்டி ஒரு புரிதல் இருக்கும்.

இப்படி இருந்த நாங்க எப்படி பிரிஞ்சோம் தெரியுமா ?கேட்டா உனக்கு சிரிப்பு வரும்.

ஒரு கல்யாண ரிசப்ஷன் ல முன்னப்பின்ன பழகாத யாரோ ஒரு ஆள் “அந்த டைரக்டர் வேற கம்பெனில அட்வான்ஸ் வாங்கிட்டார்”னு சொன்னதை நம்பினதுதான்.

கேணத்தனமா இருக்குல்ல!??
அடுத்தபடம் செய்வோம்னு சொல்லிட்டு ஏமாத்திட்டானே, முதுகில குத்திட்டானேன்னு அன்னிக்கி எனக்கு தோணுச்சு. வந்த கோபத்தில அவசரமா ஒரு புதுப்பையன வெச்சு பூஜை போட்டு சூட்டிங் போய்ட்டேன். அதுக்கப்பறம் நாங்க சந்திச்சுக்கவே இல்ல.

சில வருஷங்களுக்கு முன்னால எனக்கு பைப்பாஸ் சர்ஜரி நடந்தப்போ என்னோட பழைய மேனேஜரும் அந்த டைரக்டரும் ஆஸ்பத்திரி ல என்னைப் பாக்க வந்தாங்க .

என்னைப் பாத்ததும் அவருக்கு கண்கலங்க எனக்கும் அழுக வந்திட்டு , என் கைய பிடிச்சு எப்டி இருக்கீங்க தலைவரேன்னு கேட்டாப்ல , நான் அப்போவும் ” ஆனாலும் நீ அட்வான்ஸ் வாங்கிருக்கக்கூடாது”ன்னேன்.

“உங்க அட்வான்ஸ்க்காக நான்தான் ஆறுமாசம் காத்திருந்தேன் , இதோ நம்ம மேனேஜரே சாட்சி, எப்டி தலைவரே வாக்கு மாறுவேன்?”

திரும்பி மேனேஜரப் பாக்கறேன், ஆமான்னு தலையாட்டுறான். கிட்டக்க வந்து ” எத்தன தடவ உங்கட்ட சொல்ல வந்தேன், நீங்க என்னன்னு கூட கேக்கல, சரினு விட்டுட்டேன்”

“ஏம்பா நான் தான் அப்டி இருந்தா, நீயாவது வந்திருக்கக்கூடாதா”ன்னு டைரக்டர கேட்டா

“இவன் இல்லாமலே என்னால ஜெயிக்க முடியும்னு நீங்க சொன்னதா கேள்விப்பட்டு கோபத்துல தனியா ஒதுங்கிட்டேன் தலைவரே”ங்கறான் .

இப்படி சொன்ன நாதாரிய அந்த டைரக்ட்டரும் மறந்துட்டிருக்கார்.

எவனோ முகமே தெரியாத ஒருத்தன் சம்பந்தமே இல்லாம , நாம நல்லா பழகின ஒருத்தனப் பத்தி போறபோக்குல கொளுத்திப் போட்டுப் போய்ட்டான்.

மறுபடியும் கையப்புடிச்சு கண்கலங்கி ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கும்போது 30 வருசம் ஓடிப்போச்சு .

தற்கொலைங்கறது நாம நம்மள கொல்றது மட்டுமில்ல , நல்ல நட்பையும் உறவையும் காரணமே இல்லாமக் கொல்றதும் ஒருவகைல தற்கொலை தான் …

///இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்

10/09/2019 :- மதுரை

அரவிந்த் யுவராஜ்

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ALEX IN WONDERLAND

அமேசான் ப்ரைம்ல பாத்து
நானும் என்னோட சாங்கியத்த முடிச்சுட்டேன்.

இதில் அலெக்ஸ பாராட்டியே ஆகவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு .

நல்ல ப்ராக்டிஸ்
ரொம்ப சின்சியரான ஆர்டர்
அவரோட ஸ்டமினா

அபாரம்

இது போக ,

தான் டார்கெட் பண்ற ஆடியன்ஸ் , அவங்களுக்கு எதுவரைக்கும் போதும்னு தெரிஞ்ச அவரோட 15 வருஷ ஐடி அனுபவம்.

இன்னும் குறிப்பா ஏசி ரூமுக்குள்ள என்னென்ன சத்தங்கள் புரியும் புரியாது – பிடிக்கும் பிடிக்காதுன்னு பல்ஸ் பிடிச்ச அவரோட சாதுர்யம்

இதுல இன்னொரு கிளை ஒர்க் அவுட் பண்ணிருக்காப்ல,

அதாவது
என்னென்ன வகையான ஆடியன்ஸ் அவரோட டார்கெட்ங்கறத மனுஷன் கரெக்ட்டா பிரிச்சி ,
அதில் ஒரே ஒரு கேட்டகிரிய மட்டும் ஜலிச்சு எடுத்து அடிச்சிருக்கான் மனுஷன்.

எது அந்த ஒண்ணே ஒண்ணு???

எதையுமே நுனிப்புல் மேஞ்சு ,
டேட்டாஸ் மட்டுமே கலெக்ட் பண்ணிட்டு அதையே அறிவு- ஞானம்ன்னு நம்பிட்டு, தெளிவா அதை டைம்பாஸா மட்டும் வெச்சுகிட்டு,
ஆனா சம்பந்தமே இல்லாத வேற ஒரு துறைல வேலை பாத்து பணம் சம்பாதிக்கும் பெரும்பான்மையான இணைய தலைமுறையினர் ….

( டிஸ்கி :- ஸ்கைப்ல ஈமக்கிரியை செய்துட்டு , “வாட் டு டூ – விதி”ன்னு மறுநாள் ஆபீஸ் போகுற க்ரூப்பும் இதுல சேத்தி)

இவங்க மட்டும் தான் ….

இதுலயும் ஒரு செம சுழி இருக்கு,

இந்த ஒரு க்ரூப்ல தான்

நீங்க நேரடியா 23 ல இருந்து நெருக்கி 50 வரை கவர் பண்ண முடியும் / (மறைமுகமா எலைட் க்ரூப் வயசு வித்தியாசம் இல்லாம உள்ள சேர்ந்திடும்) 😉

அதேபோல உலகம் முழுக்க இருக்கும் தமிழ் ஆடியன்ஸ சேர்த்து தங்லீஷ் கலந்து – ஆனா தமிழ்ல (அப்டித்தான இப்போ வீடுகளில் தமிழ் இருக்கு) இதை க்ளோபலைஸ் பண்ணினது மார்கெட்டிங்கோட தொம்ச மூவ்…

இன்னும் நுட்பமா ஒரு விஷயம்..

என்னன்னா

1990 க்கு பிறகுதான் வெளிநாட்டில் செட்டிலான தமிழ் மக்கள் அதிகம்ங்கறதால , அதுக்கேத்த மாதிரி கான்ஸப்ட்ட டிசைன் பண்ணிருக்காப்ல, (அல்லது அவர் டேஸ்ட் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிதுன்னு வெச்சுக்கலாம்)

இதுக்கு ஒரு சின்ன உதாரணம் –

இளையராஜா பாட்டுல வரும் கோரஸ கிண்டல் பண்ணின அலெக்ஸ்
ரகுமானோட முதல் படம் ரோஜால வரும் “ருக்குமணி ருக்குமணி” ல இருந்து “காதலன்” – என்னவளேன்னு பிக்கப் ஆகி இப்ப வரப்போர பிகிலு வரைக்கும் அவர் பயன்படுத்துன பல்லாயிரக்கணக்கான கோரல்ஸ்ல ஒண்ணு பத்தியும் பேசவே இல்லை,
அதாவது அலெக்ஸ் காதில விழல – இல்லன்னா விழுந்தும் சாமர்த்தியமா சொல்லல …

இத கண்டிப்பா பாராட்டித்தானே ஆகணும்!!!
ஏன்னா – டார்கெட்டட் ஆடியன்ஸ்

வெல்டன் அலெக்ஸ் 👏 👏

தனக்கு முன்னால இருக்கும் ஆடியன்ஸோட வேலையும் வாழ்க்கையுமே எதுனா டார்கெட் ஓரியண்ட்டடா இருக்கும்ங்கறது அவர் அனுபவத்தில் தெரிஞ்சதால ஒவ்வொரு செக்மெண்ட் முடிவுலயும் அந்த டாபிக் நாயகர வெச்சு ஒரு கூஸ்பம்ஸ் மோடிவேஷனல் ஸ்பீச் குடுக்குறாப்ல பாருங்க …

க்ளாப்ஸ் அள்ளுது …

அதிலும் கர்ணன் கேரக்டர் சிவாஜிய வெச்சு லிங்க் பண்ணி ஒண்ணு சொன்னாப்ல ஜி …
சான்ஸே இல்ல …. அரங்கமே கத்திக்குமிக்குது….

இது என்னன்னு கொஞ்சம் கூட யோசிக்க விடாம என்கேஜ் பண்றது ,
அப்டி யோசிச்சாலும் போற போக்குல லேசா யாராவது இடிச்சா திரும்பி பாத்து சிரிச்சுட்டு போற அளவுக்கு மட்டும் மினிமம் காண்டு கிளப்பறது,
இந்த டெக்னிக்க சும்மா அல்டிமேட்டா பண்ணிருக்காப்ல ..

இத டைப் பண்ணும்போது
நடிகர் சோ ஒரு மேடைல பேசினது நினைவுக்கு வருது, (பாலச்சந்தர் விழான்னு நினைக்கிறேன்)

“” ஒருத்தன் செய்றது நமக்கு வரலன்னா , அத கிண்டல் பண்ணி விட்டுடணும் . அவன் லபோதிபோனு அடிச்சுப்பான். அந்த சத்தத்தில நமக்கு பேர் வரும். அப்படித்தான் நான் தனியா நாடக க்ரூப் ஆரம்பிச்சு பெயரெடுத்தேன் ” ….

நாலைஞ்சு வருஷம் கழிச்சி எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஏற்பட்ட மாதிரி யாருனா இந்த வீடியோல இருந்து செம ரகள மேட்டர எடுத்து அலெக்ஸ அட்டாக் பண்ண வாய்ப்பிருக்கு

(சட்டரீதியா அதுக்கும் பதில் சொல்ல அவர் பாடின சர்வமத கூட்டுப் ப்ராத்தனைப்பாடல் துணை இருக்கு)

ஆனா டூ லேட் ப்ரோ…

அதுக்குள்ள நம்மாளு பல வேர்ல்டு டூர்கள முடிச்சு சில கோடிகள சேர்த்து வேற லெவல்ல செட்டிலாகிருப்பார் …

அலெக்ஸ் நிஜமாவே ஜெயிச்சுட்டாப்ல ..

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

கிருஷ்ணனின் “சாக்‌ஷ்”

முகநூல் பதிவு :- ஆகஸ்ட் 1 / 2016

டி எம் கிருஷ்ணாவுக்கு விருதா?!! இது விருதான்னு தரலோக்கலா எறங்கி (இதுல சஞ்சய் சுப்ரமண்யம் மென்னியவேற நெரிச்சு) ஜெயமோகன் அண்ணாச்சி கம்பு சுத்தினது ஒரு பக்கம்.. ஆமா – இல்லன்னு போட்டி போட்டு ரெண்டு குருப்பா பிரிஞ்சு இங்கன ஒரே ராவடி… எனக்கென்னபோச்சு… நான் எம்பாட்ல அனந்தபுரி எக்ஸ்ப்ரஸ்ல நீட்டி நிமிந்து “அங்கே இடி முழங்குது” தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் கேட்டுட்ருந்தேன்.

அப்பொதான் ஜெயமோகன் அண்ணாச்சி எழுதின “நாக்கு” சிறுகதை ஞாபகத்துக்கு வந்துச்சு …. சுருக்கமா சொல்லமுடியுமான்னு பாக்கறேன் . வேற எதுனா புரிஞ்சுதுன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல ஆமா…

சரி இப்பொ கதை ……………..

கெய்ரோவின் புறநகர்ப் பகுதியில் நாசரின் வீடு. அமெரிக்காவிலிருந்து வந்திருந்த நண்பன் கிருஷ்ணனுடன் (நோட் திஸ் நேம் யுவரானர்!) இரவு உணவை ஆரம்பிக்கிறான். உணவுக்கு முன்னதாக நாசர் ஊற்றிக் கொடுத்த எகிப்தின் பாரம்பர்ய பானமான “சாக்‌ஷ்” ஐ ருசித்தபடியெ “அப்துல் லத்திப் அல் பக்தாதி” தெரியுமா!? என்று கிருஷ்ணன் கேட்க, “தெரியாது” என்கிறான் நாசர்.

பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தொழில்முறை மருத்துவர் – வேதியியல் அறிஞர் “அப்துல் லத்திப் அல் பக்தாதி”… 1197 ல் கெய்ரோ வருகிறார். 1200 – 1203 வரை மூன்று வருடங்கள் நைல் நதி வரண்டு எகிப்தில் கடும் பஞ்சம் நிலவுகிறது. அரசாங்கக் கணக்குப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒன்றைரை லட்சம். “அல் பக்தாதி” எழுதி வைத்த குறிப்பொன்றில் இப்படி சொல்கிறார் .

///” மக்கள் உணவுக்காக வெறி கொண்டு அலைந்தார்கள். கண்ணில் பட்ட பச்சையெல்லாம் தின்றார்கள். கொலையும் கொள்ளையும் செய்தார்கள். எல்லாம் முடிந்து ஏதுமில்லாமற்போக கடைசியில் நர மாமிசம் சாப்பிட ஆரம்பித்தார்கள்”///

” என்ன ..!!!!!!?? என்று விழித்த நாசரை நோக்கி ஆம் என்பதைப்போல தலையசைக்கிறான் கிருஷ்ணன்..

//”முதலில் இறந்தவர்களை சிலர் ரகசியமாக சுட்டுத்தின்ன ஆரம்பித்தார்கள் . நாளடவில் ரகசியம் உடைந்து , தயக்கம் விலகி பகிரங்கமாக சாப்பிட ஆரம்பித்தார்கள். அடுத்து குழுவாகக்கூடி வேட்டையாட ஆரம்பித்தார்கள். குழந்தைகளையும் முதியவர்களையும் ருசிகண்டு பிரித்து சுவையாக சமைத்து உண்ணத் துவங்கினார்கள். உண்டபின் எஞ்சியதை வியாபாரம் செய்தனர். அது ஒரு வணிகமாக மாறத் துவங்கியது. ‘மிஸர்’ என்ற ஊரில் ‘பொரித்த குழந்தைகளை’ விற்பதற்காக கூடைகளில் வைத்திருப்பதைக் கண்டேன்”/// என்று அப்துல் லத்திப் அல் பக்தாதி எழுதுகிறார் …. நாசரின் முகம் அருவருப்பில் சுருங்க, “இது உண்மை” என்கிறான் கிருஷ்ணன்.

///”பஞ்சம் முடிந்த பின்னும் ருசி கண்டவர்கள் அடங்கவில்லை, தொடர்ந்து கொலைகள் செய்தபடி இருந்தனர், அரசாங்கம் கடும் சட்டங்களை இயற்றி அடக்கியது. அதில் பலர் புறநகர் பகுதிகளில் சென்று குடியேறி வழிப்போக்கர்களைக் கொன்றுதின்ற சம்பவங்களும் உண்டு” ///

“அல் பக்தாதி கொஞ்சம் ஓவரா எழுதியிருக்காரோ” என்று நாசர் இழுக்க “அவர் ஒரு மருத்துவர் – ஆய்வாளரும் கூட, சரியாகத்தான் சொல்லியிருப்பார்……ஏன் நாசர், எகிப்தில் இன்னும் ஏதேனும் இனக்குழுக்களில் மனித மாமிசம் சாப்பிடும் வழக்கம் உண்டா? ”

எனக்குத் தெரிந்து இல்லை கிருஷ்ணன்”

“மனித நாக்கு வித்தியாசமானது நாசர், எப்போதும் தன் பூர்வீக ருசியைத் தேடிக்கொண்டே இருக்கும்” என்கிறான் கிருஷ்ணன்.

இருபது நாட்களுக்கும் மேலாக கெய்ரோவில் தங்கி, நாசரும் கிருஷ்ணனும் பல இடங்கள் சுற்றி வருகினறனர். பல இனக்குழுக்களை சந்திக்கின்றனர்.ஆனால் யாரும் எந்த சூழலிலும் மனித மாமிசத்தை உண்ணுவதில்லை என்னும் தகவலே எஞ்சுகிறது.

கிருஷ்ணன் அமெரிக்கா திரும்பவேண்டிய நாளும் வருகிறது. அதற்குள் நாசர் தினமும் கொடுத்த “சாக்‌ஷ்” பானத்திற்கு அடிமையாகி விடுகிறான் கிருஷ்ணன். தனக்கு ஏன் இது பிடித்தது என்பதை நாசரிடம் இப்படி சொல்கிறான்

” நானும் என் முன்னோர்களும் சுத்தமான சைவ பட்சிணிகள், முட்டைகூட தொடமாட்டோம். வருடா வருடம் எங்களின் குல தெய்வமான காளிக்கு திருவிழா எடுப்போம், அப்பொது எங்கள் இனத்துப் பெரியவர்கள் ஒரு பானம் தயாரித்து அருந்துவார்கள், நானும் என் பத்து-பனிரெண்டாவது வயதில் அதைக் குடித்திருக்கிறேன்… அதுவும் இந்த சாக்‌ஷும் ஒன்றுபோல இருக்கிறதென்பதை இன்று காலைதான் உணர்ந்தேன்” என்கிறான் கிருஷ்னன். “இது அமெரிக்காவில் கிடைக்குமா ” என்று நாசரிடம் கேட்கிறான். தான் இரண்டு நாட்களுக்கு முன்னரெ 10 கேஸ்கள் கிருஷ்ணனின் முகவரிக்கு அனுப்பிவிட்டதாக நாசர் சொல்கிறான்.

கிருஷ்ணனை கெய்ரோ ஏர்போர்ட்டில் இறக்கிவிட்டு, திரும்பி வந்துகொண்டிருக்கும் வழியில் ஒரு மூதாட்டி சாலையில் நின்றபடி லிப்ட் கேட்பதைப்போல கைகாட்ட, நாசர் காரை நிறுத்துகிறான். எகிப்தின் எல்லையோர கிராமப்பகுதி ஒன்றில் வசிக்கும் அவள், கெய்ரோவின் புறநகர் பகுதியில் இருக்கும் தன் பேத்தியைப் பார்க்க வந்ததாகக் கூற , நாசர் அம்மூதாட்டியை தன் காரில் ஏற்றிக் கொள்கிறான்.. அவளுடைய கைகளைப் பார்க்கிறான், நீண்ட நகங்கள்.. கால்களிலும் நீண்ட நகங்கள்.. பேச்சுக்கொடுத்தபடி வெட்டப்படாத அவளின் நகங்கள் பற்றிக் கேட்கிறான்.

“எங்கள் இனக்குழுவின் வழக்கப்படி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நகம் வெட்டுவோம், அதுவும் ஒரு திருநாளன்று எல்லோரும் கூடி வெட்டுவோம், அதை எங்கள் குழுவினர் கொதிகலனில் போட்டு கலக்கி சாறாக்குவார்கள்..”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே மூதாட்டி இறங்கும் இடம் வர வண்டியை நிறுத்தினான் நாசர். வெளியெ இறங்கிய மூதாட்டி நன்றி கூறுகிறாள், நாசரும் சலாம் வைத்துவிட்டு

“அம்மா, அந்த சாற்றை என்ன செய்வீர்கள்?”

“எங்கள் இனபானத்தின் முக்கிய மூலப்பொருள் அதுதான்”

“ஓ .. அந்த பானத்தின் பெயர்????”

“சாக்‌ஷ்” ….!!!

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

எங்கூரு மொறம ….

20150402-181816.jpg

படத்த நல்லா பாத்துக்குங்க ……..

சாங்கியத்த சொல்றேன்….. மண்டகப்படி மொறம மீறாம செய்யணும்… அப்பத்தான் சரியா வரும்… ரைட்டா ?!

1. நொட்டாங்கைப் பக்க மேம்மூலையில ஒரு தாம்பாளத்துல அடுக்கிவச்சிருக்கு பாருங்க, அதான் பால்பன்னு… பொஃப்புன்னு பொங்கியிருக்கும், சீனிப்பாகுல முக்கி ஊறவச்சு அடுக்கிருவாக..
“அதுல ஒண்ணு குடுங்ண்ணே” ன்னு கேக்கணும். வாழெலைல வச்சு இன்னுங்கொஞ்சம் சீனிப்பாகு ஊத்தித்தரும்போதே எச்சில் ஊறும்.. அதப்பதம்மா விண்டு பாகுல முக்கிப்பொரட்டி வாய்க்குள்ளபோட்டு மெல்லாம, நாக்கக்கொண்டியே அரைக்கணும்… அப்பிடியே கரைஞ்சு தேனா தொண்டக்குழியில இறங்கும்.. ஒரு விண்டு, அடுத்த விண்டு,… வாய் தொடங்கி உடம்பே இனிச்சுக்கெடக்கும்…. தெகட்டிராத மெதமான இனிப்பு

2. பால்பன்ன சாப்புட்டு கடைசி ஆள்காட்டிவெரல்ல அந்த எலைய வழிச்சு நக்குறது நம்ம மதுரை மரபு.. முடிச்சதும் கையக் கழுவிப்புட்டு, அரட்டம்ப்ளர் தண்ணிய வாய்க்குள்ளா ஊத்தி கொப்புளிச்சு முழுங்கிரணும்…….

ஆச்சா!!???

3. அடுத்து சோத்தாங்கைப் பக்கமாத் தெரியுதுபாத்தியளா? அதான் வடை.. அது வெறும் வடையில்ல சாமி. விசாலம் காபி கடையோட வடை. கெட்டிச்சட்னி வச்சுத் தருவாக. பால்பன்னு சாப்பிட்டு கொப்புளிச்சு முழுங்குனதுமே இது ஒண்ணு வாங்கணும். வடை மேலாக்குல மொருமொருன்னு “இந்தா ராசா”ன்னு கூப்புடும். அத நலுங்காம பிச்சு கெட்டிச் சட்னில நோகாமப் பொரட்டி வாய்லபோட்டு பட்டும் படாம மெல்லணும்.. தேங்கா-பச்ச மெளகா – வட மூணும் சரிவிகிதமா கலந்து ஒரு ருசி ருசிக்கும் பாருங்க… அப்பிடியே தூக்கும் … இப்பிடியே நாலு விண்டுல கடைசி துண்டு வந்துரும்

4. . வடையோட கடைசித் துண்டத்த வாய்க்குள்ள போடுறதுக்கு முன்னாடி, இந்தா தெய்வகடாச்சமா நிக்கிறாரு பாருங்க நம்மண்ணே, அவரப் பாத்து தலைய ஆட்டிரணும்..

5. கடைசி விண்ட சாப்புடுறதுக்கு தனி மொற இருக்கு, எப்டின்னு சொல்றேன்….
அதக்கொண்டி எலையில இருக்குற மொத்தச் சட்னியையுமெ தொடச்செடுத்து அப்பிடியே வாய்க்குள்ள போட்ரணும். வடத் துண்டத்தவிட சட்னி சாஸ்த்தியா இருக்கும். ஒரப்பும் கொஞ்சம் ஏறும். அப்பிடி ஏறிக்கிருக்கப்போ, கம கம வாசத்தோட காபி கைக்கு வரும்.. இந்தா படத்துல தெரியுது பாருங்க, அதான் … அந்தக் காபிதான்.

6. கடைசி வாய் மென்னு முழுங்குனதுமே, காபிய லேசா உறிஞ்சிரணும்…. (தண்ணியக் குடிக்கிறது,கைய்யகிய்யக் கழுவப்போறது கண்டிசனா கூடாதுப்பு) . அந்த வட சட்னி காரம் பரவிக்கெடந்த நாக்குல இந்த சூடான காபி விழுந்ததும் ஒரு சுகமான ருசி ஆரம்பிக்கும் பாருங்க …. கெரக்கமே வந்துரும், இந்த போதை எங்கேயுமே நீங்க அனுபவிக்க முடியாது..

7 . அந்தக் கெரக்கத்துலயே ஒண்ணு ரெண்டு மூணு மடக்கு குடிச்சதும், காபி பாதி தீந்துரும். அப்போ டம்ளர ஓரமா வெச்சுட்டு போய், வடை எலைய தொட்டில போட்டுட்டு கைகழுவிட்டு வந்து…….
மீதி காபிய டக்குன்னு குடிச்சிரக்கூடாது…
(கொஞ்சம் பொறுங்க அவசரப்படாதிய .. சரியா?!!!!)

8. அந்த அரட்டம்ளர் காபி கிளாஸ மொள்ளமா கலக்குற மாதிரி, இந்தப்பக்கமா அந்தப்பக்கமா சிந்தீராம சுத்தணும். இப்போ லேசா ஒரு மடக்கு குடிச்சுப் பாத்தா, அடியில இருக்குற மிச்ச சீனி கரஞ்சு, தூக்கலான இனிப்புல காபி நாக்கக் கழுவி தொண்டைக்குள்ள எறங்கும் பாருங்க…. அடேயப்பா … அப்பிடியிருக்கும்….ம்ம்ம்ம்ம்ம்
அதே போதைல மிச்ச காபியையும் குடிச்சுப்புட்டு, துட்டக் குடுத்துட்டு அப்பிடியே சுத்தும் முத்தும் பாருங்க ….. வானத்தப்பாருங்க … கைய விரிச்சு ஒடம்ப ஒரு முறுக்குவிடுங்க…. கண்ணு லேசா கலங்கும். இந்த உலகமும் அந்த வானமும் அம்பூட்டு அழகாவும் புதுசாவும் தெரியும்…….!

Posted in Uncategorized | 10 பின்னூட்டங்கள்

ஆரம்பிச்சாச்சு …

Chennai-Book-Fair-2014-1
ஆண்டு சரியாக நினைவில் இல்லை , ஆனால் பதிமூன்று வருடங்களுக்குக் குறையாமல் இருக்கும் என்பது என் அனுமானம். மவுண்ட் ரோடு கூவக் கரையோரம் ஸ்பென்சர்க்குப் பக்கத்தில் இருக்கும் காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் புத்தககக் கண்காட்சி. பழைய புத்தகக் கடைகளிலும், சில குறிப்பிட்ட புத்தகக் கடைகளிலும் புத்தகம் வாங்கிப் பழகிய என் போன்றோருக்கு அது புது அனுபவம். அதற்கு முன் ஒரே முறை கல்கத்தா புத்தகக் கண்காட்சி போய் வேடிக்கை பார்த்த அனுபவம் மட்டுமே என் முந்தைய பொதி ..

ஏகே செட்டியார் எழுதிய சினிமா பற்றிய மெலிசான புத்தகம் ஒன்றும், முன்னமே பரிச்சயம் இருந்தாலும் 5 ரூபாய் 10 ரூபாயென என்சிபிஎச் ல் இடதுசாரி மற்றும் ருஷ்ய இலக்கிய புத்தகங்களும் வாங்கி வந்த நினைவு. வாங்கிய புத்தகங்களை கடை பரப்பி வேடிக்கை பார்க்கும் குஷி இருக்கிறதே. காகித மணம் நிறைந்தஅறையில் கழித்த அந்த இரவு ஒரு சுகானுபவம்.

சொல்ல வந்த விஷயம் இதுதான் ….

இன்று புத்தகக் கண்காட்சி தொடங்கிவிட்டது என்று யோசிக்கும்போதே உள்ளுக்குள் ஒரு சந்தோஷ குறுகுறுப்பு ஊறுவதை பகிர நினைத்தேன் என்பது மட்டுமே …

வாசிப்பது, படிப்பது, தெரிந்துகொள்வது, கற்றுக்கொள்வது , அனுபவங்கள் பெறுவது, இப்படி என்னென்ன பெயரிலோ ஒரு புத்தகத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அணுகுவர். அது அவரவர் மன வடிவின் வெளிப்பாடு. என்மட்டில் புத்தகங்கள் என்றாலே ஒருவகைக் கொண்டாட்டமும் குதூகலமும் தான். புத்தகக் கண்காட்சிகள் எப்பொழுதுமே திருவிழாக்கள் .

வழக்கம்போல இந்த முறையும் புதிய புதிய புத்தகங்கள் வருவது மிக மிக சந்தோஷமாக இருக்கிறது … இந்த ஆண்டு வெளிவரும் புத்தகங்களில் எனக்குப் பரிச்சையமான பலரின் புத்தகங்களும் வருகின்றன..

அன்பு நண்பன் “கவிதைக்காரன்” இளங்கோவின் “பிரைலியில் உறையும் நகரம்” கவிதைத் தொகுப்பு .
மதிப்பிற்குரிய திருமதி .பத்மஜா நாராயணன் அவர்களின் அருமையான மொழிபெயர்ப்பில் “நான் மலாலா ”
என் அன்பு போகன் ஷங்கரின் கவிதைத் தொகுப்பான “தடித்த கண்ணாடி போட்ட பூனை ”
திரு.பாரதி மணி ஐயாவின் முழு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பான “புள்ளிகள் கோடுகள் கோலங்கள் ”
அன்புத் தம்பி தம்பி பூ.கோ.சரவணனின் “டாப் 100 அறிவியல் மேதைகள்” மற்றும் “டாப் 200 வரலாற்று மனிதர்கள்”
பங்காளி ஆத்மார்த்தியின் “ஆடாத நடனம்” சிறுகதைத் தொகுப்பு
தம்பி கடங்கநேரியானின் கவிதைத் தொகுப்பு “யாவும் சமீபித்திருக்கிறது”
பைத்திய ருசி கணேசகுமாரனின் அடுத்த தொகுப்பு “மெனிஞ்சியொமா ”
அன்புத் தம்பி க. உதயகுமாரின் “கூதிர்காலத்தின் துயரப்பாடல்”
திருமதி. உமா ஷக்தி அவர்களின் கட்டுரைத் தொகுப்பான “தற்கால உலகத் திரைப்படங்கள்”
நண்பர் ஸ்ரீதர் (நந்தன் ஸ்ரீதரன்) அவர்களின் சிறுகதைத் தொகுப்பு “தாழி ”
தோழி சுஜாதா செல்வராஜின் கவிதைத் தொகுப்பு “காலங்களைக் கடந்து வருபவன் ”
அன்பு அக்கா சந்திராவின் கவிதைத் தொகுப்பு “வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள்”
அன்பன் அதிஷாவின் “ஃபேஸ்புக் பொண்ணு”
கவிதா சொர்ணவல்லியின் சிறுகதைத் தொகுப்பு “பொசல்”
தம்பி ரமேஷ் ரக்சனின் சிறுகதைத் தொகுப்பான “16”

இப்படி மனதிற்கு இனிய தோழமைகளின் எழுத்துக்களைச் சுமந்துகொண்டு வரும் இந்த புத்தகக் கண்காட்சி சொல்லொண்ணா மகிழ்ச்சியைத் தருகிறது . இதில் ஒருசில புத்தகங்களை நான் வாசித்துவிட்டேன் என்பது கொசுறு …. (இப்போது நினைவில் இருக்கும் புத்தகங்களை மேலே குறிப்பிட்டுள்ளேன் . ஏதேனும் விடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்ட நண்பர்கள் பொறுத்தருள்க)

பெரும் எழுத்தாளுமைகளான எஸ் ரா , சாரு போன்றோரின் புத்தகங்கள் வருவது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி. எஸ் ரா வின் சிறுகதைகள் எல்லாம் சேர்த்து மூன்று தொகுதிகள் மற்றும் “நான்காவது சினிமா ” இரண்டையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். எழுத்தாளரும் வசன கர்த்தாவுமான பாஸ்கர் சக்தியின் சிறுகதைகள் மொத்தமும் ஒரு தொகுப்பாக வெளிவருகிறது. அருமை அண்ணன் ராஜ் சிவா அவர்களின் இரண்டு அறிவியல் தொகுப்புகளும், தம்பி லஷ்மி சரவணகுமாரின் படைப்பும் புதிய வரவுகளில் காத்திருக்கின்றன. வா.மணிகண்டனின் கட்டுரைத் தொகுப்பும் எனக்குப் பிடித்த கௌதம சித்தார்த்தன் அண்ணனின் புத்தகமும் இம்முறை வருகிறது. … நிறைய மொழி பெயர்ப்புகளும் வெளிவருகின்றன. யுவன் சந்திரசேகர் , பெருமாள் முருகன்,பூமணி, சுகுமாரன் ஜெயமோகன் போன்றோரின் புதிய படைப்புகள் வருகிறதா தெரியவில்லை .. கண்காட்சியில் தெரிந்துகொள்ளலாம்.சிலபல புத்தகங்களின் பெயரைச் சொல்லி தத்துவார்த்தம், மேஜிக்கல் ரியலிசம் என்று பயமுறுத்துவது இந்த இடத்திற்கு “ஓவர் சீன்” எனக் கருதுவதால் இத்தோட அபீட்டு…

book fair 2

A reader lives a thousand lives before he dies என்பார்கள் .. உண்மைதான், நாம் வாழும் ஒற்றை வாழ்க்கையில் ஓராயிரம் வாழ்க்கைகளைக் கடந்து செல்லக்கூடியதான அனுபவத்தை புத்தகங்களால் மட்டுமே தரமுடியும்.

“வாசித்தல்” என்பது இந்த வாழ்க்கையையும் சக மனிதர்களையும் “நேசித்தல் ” என்னும் செயலுக்கான ஆதாரப் புள்ளி என்பேன் . அறிவின் சேகரம் ஒரு மெல்லிய நீரோடையில் மனதார நீந்திக் களித்து எழும் ஆகசுகம். புத்தகங்கள் வாழ்க்கையை மாற்றுகிறதோ இல்லையோ , வாழ்க்கையை அழகாக்குகிறது என்பது மெய்யான மெய். யாரோ ஒருவரின் எழுத்துக்களையும் வாழ்க்கையையும் படித்ததனால் “நாம் அறிவாளிகள்” என்பதை வாசித்தலின் முக்கியத்துவமாக நான் கருதவில்லை. மாறாக அந்த எழுத்துக்கள், எழுதியவர்களையும் நம்முள் அடக்கிப் பயணிக்கவைத்து , நம்மை “அனுபவசாலிகளாக” மாற்றும் அற்புதத்தைச் செய்கிறது என்பேன்.கண்டிப்பாக ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு அனுபவம்.அந்த அனுபவம் நமக்கு ஆத்ம நிறைவினையும் அதை மற்றவரோடு பகிர்ந்துகொள்ளும்போது , கேட்பவரையும் நம் அனுபவத்துடன் சேர்த்து அணைத்துக்கொள்ளும் ஒரு இனிய ரசவாத சாகசத்தை புத்தகங்களைத் தவிர வேறேதும் நமக்குத் செய்து விடப்போவதில்லை .

நாம்பெற்ற பெறப்போகும் இன்பத்தை நம் வருங்கால சந்ததியினருக்கும் கடத்த முற்படுவது நம் கடமையல்லவா? … அதிலும் “பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைத் தமிழிலும் படிக்கப் பயிற்றுவிக்கலாம் ” தவறில்லை என்றே கருதுகிறேன் .. இப்படியான தொனியில் சொல்லக் காரணம் தமிழில் வாசிப்பதை அவ்வளவு கௌரவமாகக் கருதாத மனநிலை தற்போது தமிழை நன்கு வாசிக்கும் வாசகப் பெற்றோருக்கும் , ஏன் சில எழுத்தாளர்களுக்குமே உண்டு . தாய் மொழியைக் கெஞ்சிதான் வாசிக்க வைக்கவேண்டுமென்றால் கெஞ்சிக் கேட்பதில் தவறில்லை… வாசித்தலைக் கற்றுக்கொடுக்கும் ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளுக்கு “அறிவார்ந்த தோழமை ” என்னும் பெரும் சொத்து ஒன்றினை எழுதித் தந்துவிடுகின்றனர். அது உங்களின் காலத்திற்குப் பிறகும் அவர்களின் கூடவே எப்போதும் இருக்கும். அவர்களையும் இத்திருவிழாவில் பங்குபெறச் செய்வது நம் கடமை , பொறுப்பும் கூட …

வரும்பொழுது எப்படி வரவேண்டும் , என்னென்னெ தயாரிப்புகளோடு வரவேண்டும் என்று தனியாகப் பாடமேடுப்பது சரிவராது … கொஞ்சம் பணம் எடுத்துக்கொண்டு முதலில் ஒருமுறை வந்து பாருங்கள் .. நீங்களே புரிந்துகொள்வீர்கள் …

ஒரு விசேஷ வீட்டு வரவேற்பிறகு அழைக்கும் முறையில் சொல்வதென்றால்
” மறக்காம குடும்பத்தோட கட்டாயம் வந்திருங்க “

Posted in Uncategorized | 4 பின்னூட்டங்கள்

நன்றி துரோகமே …!

சிறுவயதில் மாமன்காரன் நம்மைத் தூக்கி, கைகளை இறுகப் பிடித்தபடி கரகரவென சுற்றுவான்.

சுற்றச் சுற்ற கொஞ்சம் கொஞ்சமாகக் கண் கிறங்க ஆரம்பித்து சகலமும் மறைய ஆரம்பிக்கும் … நன்றாகக் கரக்கி சடாரென இறக்கி நிற்க வைத்த உடனே ஒரு தள்ளாட்டம் வருமே.. சில நொடிகள் எந்தப் பிரக்ஞையும் இராது…. கால்கள் உழன்று, பார்வை சுழன்று, நிதானத்திற்குள் பிரவேசிக்கும்முன் செலப்போ விழுந்து கூட எழுவோமே…. ம்ம்ம் அதேதான்…

இது வாழ்க்கையிலும் நடக்கும்….

எல்லாம் சரியாகப் போகிறது என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது ஒரு சுழல் வரும்…

இழுத்துத் தூக்கி எறியப்பட்டு விழித்துப் பார்த்தால், முனி அடித்து மூணுகாணிதள்ளி, பரம்படிச்ச பாலுக்கோனார் வயலில் சகதி அப்பி விடியக் கருக்கலில் முளிச்ச பொன்னுத்தாயி பெரியாத்தா போல, திக்குத் தெரியாமல் பெக்கேபெக்கே முழியுடன் நின்றுகொண்டிருப்போம்…

இதற்கு ‘நேரங்காலமோ காலக்கெரகமோ தலைவிதியோ இயற்கையின் நியதியோ இப்படி என்ன வேண்டுமானாலும் வசதிக்கு சொல்லிக்கொள்ளலாம்…

அறிவு.புத்தி,ஞானம்,அனுபவம் இது எதுவும் அப்போது இல்லாத மாதிரிதான்…

மீண்டு எழுவது, துணிந்து நிமிர்வது என்று, மூன்றாவது அடி வாங்கியபின் எம்ஜிஆர் செய்யும் வேலைகளெல்லாம் ‘அப்பெறகு’ சாமி…ஜீவிச்சிருக்க முதலில் மூச்சு வாங்கவேணும்..
அதற்கு நான் “மலைகளைத்” தேடித்தான் ஓடுவேன்…. அப்படி அதில் என்ன இருக்கிறதென்று இன்னமும் எனக்குப் பிடிபடவில்லை… மனது அதை நோக்கியே இழுக்கும்…..

அப்படி ஒரு நள்ளிரவு தனிமைப் பிரயாணம் இரண்டு வாரங்களுக்கு முன் மேற்குத் தொடர்ச்சி மலைகளில்…..
மேகங்கள் போர்த்திய இரவு அது.. “ராகதேவன்” , நௌஷாத் அலி தொடங்கி, உஸ்தாத் ராஷித் கான் என பெரும் தலைகள் என் துணைக்கு…

நள்ளிரவு ஆரம்பித்து பின்னிரவு முழுக்க…. வண்டியின் வெளிச்சம் மட்டும்தான்…. எதிரே சில வண்டிகள் அவ்வபோது கடந்து மறைந்தன….

வழியில் சிறிய சமதளமொன்று தென்பட . சாலையிலிருந்து கொஞ்சம் விலகி வண்டியை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு நடந்து அதன் எல்லைப் பகுதிக்கு வந்து நின்றபோது கீழே பெரும் பள்ளம்.. தூரத்தில் ஏதோ ஊர் ஒன்றின் மஞ்சள் வெள்ளை மினுப்புகள்… கண்ணுக்கெட்டியமட்டும் கறுத்துத் தெரியும் பச்சை. கொட்டும் பனி… வலதுபுறம் மலையின் இடுக்கில் ஒரு பெருங்கல்லை செருகிவைத்தாற்போல் துருத்தி நிற்கும் ஒரு பாறை… . அதை அடைவதற்கு இந்த சமதரையின் வலது ஓரத்தில் மிகக் குறுகலான வழி…

சில நிமிடங்கள் கழித்து .உள்ளங்கைகளைச் சேர்த்து வேகமாகத் தேய்த்து கன்னங்களில் அழுத்திக்கொண்டு, வாயில் குளிர்ப் புகை பறக்க அந்த ஒற்றைப் பாறையில் உட்கார்ந்திருக்கிறேன்.

உஸ்தாத் நுஸ்ரத் ஃபதேஅலிகான் சாஹாப் கஸல் ஒன்றை ஆரம்பிக்கிறார்.. ரேயின் ‘ஜல்சகார்’ இல் வரும் ஜமீன்தாராகிறேன்…

Dheerki chatt(u) ghayi
chaandke noor se (2)

jab tu yaad aagaya
chaandni raath mein

chaand kya kehegayaa
chaandni raath mein

இந்த வரிகளை உஸ்தாத் கடக்கும் தருணம்…

கீழ்த் தண்டுவடத்தில் உருவான மின்னல் ஒன்று விர்ரெனப் பரவி பின்தலையை அடைந்து, தலை நிரப்பிய சிலிர்ப்பு உடல் முழுக்கப் பரவியது. பாறையை விட்டு பறக்க ஆரம்பித்த மனம் மலை முழுக்க சுற்ற ஆரம்பிக்க… ஆஹா ஏகாந்தம்… ..மீண்டெழுதலின் குறியீடாக விவிலியதில் வருமே “பரிசுத்த ஞானஸ்நானம்” என்றொரு சொல்… அதே ….முழுக்கக் கழுவப்பட்டெழுந்த ஓர் விவரிக்க இயலாத ‘இறகு நிலை” …

யாரப்பா அந்த தபேலா வாசிக்கும் உஸ்தாத்?!!! பகிரக் காணியில்லாத காரணத்தால், உன் விரல்களுக்கு என் முத்தங்கள் ……, இப்படியே கரைந்து கரைந்து தூங்கிப் போனேன்.

விடிவதற்கு யோசித்துக் கொண்டிருக்கும் பின்னிரவிற்கும் அதிகாலைக்கும் இடையே கண் திறந்தேன்., இந்த உலகம் சுத்திகரிக்கப்பட்டிருந்தது…. பிரிய மனமின்றி அந்தப் பாறையை விட்டு என் வண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்…

என்னை இன்னுமொரு முறை உயிர்ப்பித்த “துரோகமே” …….. நன்றி ….!

20141122-104559.jpg

Posted in Uncategorized | 13 பின்னூட்டங்கள்

சக்கரக்கட்டி ராஜாத்தி ……

 

ஒரு வாரநாளுக்கு உண்டான பரபரப்பு அவ்வளவாக அந்தத் தெருவில் இல்லை. இத்தனைக்கும் மதுரையின் முக்கிய சாலை ஒன்றின் கிளைத்தெரு அது. மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி. எல்லோரும் நேற்று செய்ததைத்தான் இன்றும் செய்துகொண்டிருந்தார்கள். மத்திம நாளொன்றின் சுடுவெயில் எந்தக் குறையுமின்றி தகித்தவண்ணம் இருந்தது. 

வேலையொன்றை முடித்துவிட்டு அந்தத் தெருவழியாக வந்துகொண்டிருந்தேன். பழமையான தெருவாதலால் நெருக்கமான தொடர் கட்டிடங்கள், பெரும்பாலும் பழையவை. டீக்கடை ஒன்றில் தென்பட்ட கூட்டம் முன்பகல் இடைவேளை என்று உணர்த்திற்று. அந்தக் கடைதாண்டி ஒரு கண்ணாடி சுவரும் கதவும் பொருத்தப்பட்ட அலுவலகம். சுத்தமான நீல இரும்பு மடக்குக் கதவு போட்டு மறைக்கப்பட்டிருந்தது. அதன் வாசலில் ஒருவர், அத்தனை வெயிலிலும் தற்போதைய தமிழரின் மரபான “சரக்கடித்து  மட்டையாவது” என்னும் தெய்வீகச் செயலில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார்.

அவதானித்தபடி அந்த இடம் கடக்கும் சமயம் ஒரு குரல்

“சக்கரக்கட்டி ராஜாத்தி – என்
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே – நான்
சாஞ்சுக்கவா சொல்லு மகராசி”

அனிச்சையாய் கால்கள் நிற்க, திரும்பினேன்.  

இன்னும் முழுமையாகக் கருமை நீங்காத நரைத்த தலை-தாடியுடன். எழுபதுகளைக் கடந்துகொண்டிருக்கும்  முறுக்கேறிய  உருவம். காலடியில் சில காகிதங்கக் செருகப்பட்ட ஒரு ப்ளாஸ்டிக் பை. இல்லாமையின் அத்தனை அடையாளங்களையும் கொண்ட அந்த மனிதனிடமிருந்து அப்படி ஒரு சாரீரம் .

“பெற்றால்தான் பிள்ளையா” படத்தில் டிஎம்எஸ் – பி.சுசீலா குரல்களில் எம்.எஸ்.வி ஐயா இசையமைப்பில் கவிஞர் வாலி எழுதிய பாடல். திரையில் எம்ஜிஆரும் சரோஜாதேவியும் வாயசைத்திருப்பார்கள். அதே பாடல் அட்சரம் பிசகாமல் இந்தக் கிழவனின் குரலில், அடடா என்ன ஒரு ராகபாவத்துடன்…..

  பல்லவி பாடும்போது தோள்களைக் குலுக்கி எம்ஜியாராகி…… அட அட அட என்ன குரல் என்ன குரல். டிஎம்எஸ்ஸின் ஊரிலிருந்து பாடும்போது அந்த வாடை இருக்கும்தானே. ஒலித்தட்டில் கேட்டதற்குப் பிறகு இவ்வளவு அழகாக வேறொருவர் பாடி நான் அதுவரை கேட்டதில்லை.

இப்படிப்பாடும் ஒரு மனுசனை “வெட்டிப்பய” என்று அலட்சியமாகக் கடந்து செல்லும் மந்தையிலிருந்து ஒரு ஆடு மட்டும் நின்று திரும்பினால் அந்தக் கலைஞனுக்கு சந்தேகம் வருவது இயல்புதானே.  திரும்பி அவரை நோக்கி நான் நடக்க, சத்தம் மெதுவாகக் குறைந்து என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.

பாட்டை முழுவதுமாகக் கேட்டுவிடவேண்டும், அது அவரின் இயல்பிலேயே இருக்கவேண்டுமென்பதால், என் கைபேசியை எடுத்து யருடனோ பேசும் பாவனையில் அவரைக் கண்டுகொள்ளாததுபோல நடைபாதையில் ஒதுங்கித் திரும்பிக்கொண்டேன்….. ஒரு சில வினாடிகள் மௌனம் ….  இயல்பாகத் திரும்புவதுபோலத் திரும்பினேன் …

“பட்டுப்போன்ற உடல் தளிரோ – என்னைப்
பார்க்கையிலே வந்த குளிரோ
தோகை மயிலின்
தோளை அணைத்த்த்த்து (குரல் சுசிலாவாகி மயங்குகிறது)

தோகை மயிலின்
தோளை அணைத்து
பழகிக் கொள்வது சுகமோ”
………………….  அப்படியே குரலை டிஎம்எஸ் ஆக மாற்றி, எம்ஜியாராக மாறி தோளைக் குலுக்கிக்கொண்டே

“தொட்டுக்கொள்ள உடல் துடிக்கும் – விழி
தூரப் போகச்சொல்லி நடிக்கும்..
ஆளை மயக்க்க்கும்ம்ம்ம் (அடடா.. ஒரு ஸ்டைலான கிறக்கம் )
பாவை சிரிப்பில்  (ஓஹோ)

“ஆளை மயக்கும்
பாவை சிரிப்பில்
ஆசை பிறந்தது எனக்கும்

…………………………………… அடுத்து ஒரு நடன அசைவுடன்

“கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்
கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்

“கேள்வி என்ன”  (டிஎம்எஸ்ஸின் அதே அணுக்கம்)
ஜாடை என்ன” (சுசீலாம்மாவின் அதே குழைவு)

“கேள்வி என்ன
ஜாடை என்ன
தேவை இல்லை வெட்கம்” . …  

………………………………….

 மெதுவாக என்னைப் பார்த்தார் … புன்னகைக்க ஆரம்பித்தேன் …. வெட்கம் கலந்த ஒரு சிரிப்பு … அதே வேட்கத்துடன்

“அத்தை மகனே அத்தானே – உன்
அழகைக் கண்டு நான் பித்தானேன்
தென்றலடிக்கும் தோட்டத்திலே –நான்
பூத்திருக்கும் முல்லைக் கொத்தானேன்”

……….
 நளினத்தில் சரோஜாதேவியாகி, குரலில் சுசிலாவின் உணர்வுடன் ராக பவனி வர …… கரைந்து உருகிப்போய்விட்டேன்.

அதே உற்சாகமும் பாவமும் குறையாமல் அடுத்த சரணங்களையும் பாடி முடித்தபோது, கடுங்கோடையொன்றில் வெடித்துப்பிளந்த வயற்காட்டின்மேல் பெருமழையொன்று கொட்டித்தீர்ந்த நிறைவு எனக்கு.  

என்னையும் வெயிலுக்கு ஒதுங்கிய தெருநாய் ஒன்றையும் தவிர வேறுயாரும் அவரை கவனிக்கவே இல்லை. ஏதோ வினோத ஜந்துவைப் பார்ப்பதுபோலப் பார்த்தபடி கடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். பாவம், அவர்களுக்குத்தான் ஆயிரத்தெட்டு வேலை.

பாடி முடித்தவரின் அருகில் சென்று

“ஐயா,.. டீ என்னமும் சாப்புடுறீங்களா”.?

குடிப்பதைப்போல கைசெய்கைகாட்டி தலையாட்டியபடியே

“வேணாம் தம்பி … போட்டது எறங்கிரும்”

“ரொம்ப நல்லாப் பாடுனீங்கய்யா “

சிரித்துக்கொண்டார்.

“ஐயா பேரு”?

“முருகன்”

“உங்களுக்கு வேறென்ன வேணும் “

“எதுவும் வேணாம் சாமி, நீ கேட்டதே போதும். ரொம்ப சந்தோசம்யா”

கீழே பார்த்தபடி நொடிகள் கடத்தியபின்

“எனக்கு ஒரே மவன். நல்லா படிக்க வச்சேன். பெரிய மருந்துக் கம்பெனியில வேல பார்க்கிறான். கல்யாணம் பண்ணி தனியா போய்ட்டான். எப்பவாச்சும் பாத்தா அஞ்சு பத்து குடுத்துட்டுப் போவான். நான் பழயபடி பேப்பர் பொறுக்கி பொழச்சுகிட்டிருக்கேன். இதுதான் அன்னைக்கும் சோறு போட்டுச்சு, இன்னைக்கும் போடுது. ஆனா சந்தோசத்துக்குக் கொறவே இல்ல. நான் நல்லா இருக்கேன்… பாத்தீல்ல… வயசு எழுவத்தி எட்டாகுது. இன்னும் ஒரு சீக்கு வந்து படுத்ததில்ல.”

“எப்ப இருந்து பாடுறீங்கய்யா”

“அது சின்ன வயசிலிருந்து …… ஒண்ணு தெரியுமா,  என் சம்சாரத்துக்கு நான் பாடுறது ரொம்பப் புடிக்கும். அதுவும் எம்ஜியார் பாட்டுன்னா அம்புட்டுப் பிரியம். அவளுக்குன்னே நெறைய பாடுவேன். அவ போய்ச் சேந்து இருவது வருசமாச்சு”

முகம் கொஞ்சம் வாடியது. உடனே சமாளித்துக்கொண்டு

“நீ ஒரு டீ சாப்புடு , ஐயா வாங்கித்தரேன்” என்று கைபிடிக்க, நான் அழுத்தி நிறுத்தியபடி

“பரவாயில்லங்கையா , நான் இப்பத்தான் சாப்பிட்டேன்.

“சரி, நான் வறேங்கய்யா “ …………………. அவர் கையில் வம்படியாக கொஞ்சம் பணத்தைத் திணித்தேன். அவர் மறுக்க, “இருக்கட்டும்” என்று நான் அழுத்த, அந்தக் கை வாங்கிக்கொண்டு வணங்கியது.. வணங்கிச் சிரித்தபடி கிளம்பினேன்.

என்னையறியாமல் ஏதோ ஒரு திருப்தி.ஒரு பெரிய வித்வானின் கச்சேரி கேட்டு வந்திருந்தால் கூட இவ்வளவு சந்தோஷம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. காரணம், அந்த வித்வம் ஏற்கனவே தெரிந்துதான். கொட்டும் அருவியில் நனைவதற்கும், திடீரென்று சிறிது நேரம் பெய்து ஓயும் கோடை மழையில் நனைவதற்கும் இருக்கும் வேறுபாடுதான்.

வந்தவேலை சீக்கிரம் முடிந்திருந்தால் இச்சம்பவத்திற்கு முன்னமே  கடந்திருப்பேன். அடுத்த தெருவழியாகப் போயிருந்தாலும் நான் செல்லவேண்டிய இலக்கை அடைந்திருக்கலாம். எதற்கு இந்ததெரு வழியே வந்தேன்.???? உண்மையில் நான் கொடுத்துவைத்தவன்தான்.

 

IMAG0544
குயில் பாடும்போது, அது அறியாமல் எடுத்த படம் …..

Posted in Uncategorized | 14 பின்னூட்டங்கள்

போலி இல்லாத வாலி…

படம்

 

இந்த வருடம் தொடங்கியது முதல் என் ஆத்மப் ப்ரியங்கள் ஒவ்வொருவராக விடைபெறுவது இடி மேல் இடி … 

நீ யாராக இருக்க விரும்புகிறாய் என்று யார் கேட்டாலும் சிறு வயதிலிருந்து ஒவ்வொருவரை சொல்லி வந்திருக்கிறேன். ஆனால் சமீப வருடங்களாக “வாலி ஐயா போல் வாழவேண்டும்” என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். இது சத்தியமான சத்தியம்.

சொல்லும் வார்த்தைகளும் எழுதும் எழுத்துக்களும் எப்போதும் பதின் பருவத்திலேயே நிற்பது இவர் ஒருவருக்குத்தான். எப்போதும் தமிழும் ஆங்கிலமும் சரளமாக ஹாஸ்யம் கலந்தே வெளிப்படும் கொடுப்பினை பெற்ற அபூர்வம் இவர்.  

இந்த இளைஞனைப் பற்றி நினைக்கும்போது நம்மையும்  அறியாமல் எதுகையும் மோனையும் துள்ளிவருகிறது …
என்னிலும் துளிர்த்தன சில வரிகளை….. இதோ 

“அழகர்மலைக் கள்ளனில்” தொடங்கிய
ஆராவமுதன் 
“காவியத்தலைவனில்” அடங்கிய 
கவித் தலைவன் 

ஓவியனாகவேண்டி
தூரிகை பிடித்த கைகள் – ராம 
காவியம் படைத்துவிட்டு
ஓய்வெடுக்கப் புறப்பட்டது 

காற்று வாங்கப்போய் 
கவிதை வாங்கிவந்தவன் – தன்னிடம்
கேட்டு வந்தோருக்கெல்லாம் – ஊற்றுபோல்
பாட்டு வழங்கினான் 

 

நித்திய பயணம் தொடங்கிய
நித்திலக் கவி மழையே 
எத்தலைமுறையும் போற்றும் 
முத்தமிழ்க் கவிஞனே   
சத்தியம் ஒன்றுரைப்பேன் -இனியொருவன் 
சாத்தியமில்லை உன்போல்…..

 

 

Posted in Uncategorized | 6 பின்னூட்டங்கள்

தனித்துவம் இல்லாத தனித்துவம் ….

படம்

 

 

“மணிவண்ணன் சாரைப் பற்றி ஒரு பதிவு போடு” என்று ஜெர்மனியில் இருந்து நிம்மி சிவா அண்ணியின் குறுஞ்செய்தி என்னிடம் வந்தபோது நான் அவர் வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தேன்.

அவரைப்பற்றி அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கும் மனோபாலா சார் உள்ளே கண்ணீரோடு தலைமாட்டில் நின்றுகொண்டிருந்தார். “அவரால்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்” என்று வெளிப்படையாகவே சொல்லும் சத்யராஜ்சார் தலையில் கைவைத்தபடி நிலைகுலைந்துபோய் உட்கார்ந்திருக்கிறார்.

அவரைப்பற்றி என்ன எழுத….

எனக்குள்ளே அவரின் மறைவின் அதிர்வு பெரும் ஓசையிட்டு இரையாமல் , தொடர்ந்து கரையை வந்து வந்து தொட்டுச்செல்லும் கடலலையின் வேகத்தில், ஆனால் நிதானமான தொடர் எண்ணமோதல்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது.

இந்த மனிதனைப் பற்றி என்ன பேரிதாக எழுதிவிடப் போகிறேன் என்று இந்தப் பதிவை எழுத ஆரம்பித்து இதுவரை வந்தபின்னும் எனக்குத் தெரியவில்லை என்பதுதான் நிஜமான நிஜம். இனி வரும் பத்திகள், ஒருகாபி கொஞ்சம் மௌனம், சில உலாத்தல்களுக்குப் பிறகு வந்தவை…

என் பள்ளி நாட்களில் ராஜபாளையம் லெட்சுமி விலாஸ் திரையரங்கில் செகெண்ட்ஷோ (இரவுக்காட்சி) “விடிஞ்சா கல்யாணம்”படத்தின் டைட்டில் கார்டில்தான் “மணிவண்ணன்” என்னும் பெயர் எனக்கு அறிமுகம். ஏனோ தெரியவில்லை, இன்றுவரை என் மனதை விட்டு நீங்காத த்ரில்லர் படங்களில் இதுவும் ஒன்று . அடுத்து நான் பார்த்து இன்னும் மனதைவிட்டு அகலாத அவரின் இன்னொருபடம் “வாழ்க்கைச் சக்கரம்” . அதுவும் இரவுக் காட்சிதான் . கம்பம் யுவராஜா திரையரங்கில்.

மேற்சொன்ன இரண்டுபடமும் அவரின் இயக்கத்தில் வந்த படங்களில் முக்கியமான இடத்திலோ , அல்லது தமிழ் சினிமாவின் முக்கிய படங்களின் வரிசையிலோ இல்லை. ஆனால் அந்த இரு படங்கள் இன்று வரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். பிடித்ததற்கான பிரத்யேகக் காரணங்கள் இன்றுவரை எனக்குப் பிடிபடவில்லை.

போராட்டங்களும் சிறைவாசமும் தன் இளம் வயதிலெயே கடந்த சமூகப் போராளியான ஒரு இளைஞன், சென்னை வந்து திரைப்பட இயக்குனரான ஒருவரிக்கதைதான் மணிவண்ணன் சாருடையது.

தனித்துவம் , புதுமை , வித்தியாசம் என்ற தமிழ் சினிமாவின் புகழ்ச்சிக்குரிய எந்தத் தகுதியுமே இல்லாமல், சினிமாவில் இருந்ததுதான் மணிவண்ணன் என்னும் எதார்த்த மனிதனின் தனித் தகுதி.

அவர் இயக்கிய படங்களில் எந்தவித “உலகத் தரமும்” , தனித்துவக் காட்சியமைப்பும் பெரிதாக இருந்ததில்லை. ஒரு கதைக்குண்டான காட்சிப்படுத்தலும், a simple making formula மட்டுமே இருந்திருக்கிறது.

பல சிறந்த சினிமா இயக்குனர்களின் பாணியை நாம் அறிவோம். அவர்கள் படங்களில் காட்சிப்படுத்தல் தொடங்கி வசனம் பேசும் முறை வரை எல்லாமே தனியாகத் தெரியும். அவர்கள் உபயோகிக்கும் களமும் கருவும் ஏறக்குறைய ஒரே மாதிரித்தான் இருக்கும்.உள்ளுக்குள் இருக்கும் கதையின் போக்கு மட்டுமே மாறியிருக்கும். ஆனால் எந்த தனிப்பாணியும் இல்லாமல் காதல், குடும்பம், த்ரில்லர், அரசியல்,நகைச்சுவை என்று வெவ்வேறு நிறமுடைய சினிமாக்களைக் கொடுத்தவர் இயக்குனர் மணிவண்ணன் அவர்கள். என் அறிவிற்கு, தமிழ் திரை உலகில் திரு.எ.பி.நாகராஜன் அவர்களுக்குப் பின் மணிவண்ணன் சார்தான் இவ்வளவு வேறுபட்ட படங்களைக் கொடுத்தவர்.

தான் சொல்ல நினைத்ததை எந்தவித தயக்கமும் இன்றி நேர்மையாக சொல்லும் திறன்படைத்த ஒரு இயக்குனர் அவர். தயாரிப்பாளிரின் சிரமம் தெரிந்த நல்ல சினிமாக்காரன் . தன் கடைசிப் படத்தின் படப்பிடிப்பைக் கூட 50 நாட்களுக்குள் நடத்தி முடித்தார் என்றால் அவரின் தொழில் சிரத்தையை யோசித்துப் பாருங்கள். நடிகராக அவருக்குக் கிடைத்த மாபெரும் அங்கிகாரம், ஒரு இயக்குனராக மணிவண்ணன் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பது என்னைப் போன்ற பலரின் குறை.

படம்

 

காதல்கோட்டை படத்தில் “ரங்கீலா ஊர்மிளா தெரியாம… நீ தமிழ்நாட்ட கேவலப்படுத்துறியா” என்ற அவரின் நக்கலான வசனம் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த நகைச்சுவை வசனம்தொட்டுத்தான் சமூக அக்கறையுள்ள ‘நடிகர் மணிவண்ணனாக’ என் மனதில் பதிய ஆரம்பித்தார்.

நடிப்பில்கூட எந்தவித தனித்துவமும் இல்லாமல் அவராகவே இருந்ததுதான் அவரின் தனித்துவம். இயல் பிம்பம் – திரை பிம்பம் (real life image & celluloid image) என்று சொல்லக்கூடிய இரண்டு முகங்கள் எல்லா நடிகர்களுக்கும் இருக்கும். ஆனால் அது இரண்டுமே இயல் பிம்பமாக (real image) அமைவது அபூர்வம். அத்தகைய கொடுப்பினை எம்.ஆர்.ராதா, மணிவண்ணன் போன்ற ஒரு சில கலைஞர்களுக்கு மட்டுமே காலம் வழங்கியிருக்கிறது. அவரின் முகத்தை நாம் மனதில் கொண்டுவரும்போதே அவர் பேசிய எதாவது ஒரு அரசியல் அல்லது சமூகக் கருத்து நம் காதில் “ங்ணா” சேர்த்து விழுவது தவிர்க்க முடியாது.

இப்படிப்பட்ட மனிதன் எங்கே மற்ற எல்லோரையும்விட இன்னும் தனித்துவப் படுகிறார்?

ஒரே ஒரு இடம்தான்.

“எப்போதும் , எந்த நிலையிலும் தன் சுயத்தை இழக்காதது.”

அவர் இயக்குனராகக் கோலோச்சிய காலத்தில் அரசியலில் இருந்த பல சினிமாக்காரர்களைவிட தேசிய, மாநில, உலக அரசியலில் அவர் அதிக ஞானமுள்ளவராக இருந்தும் , அதை அவர் எந்த வகையிலும் சுயநலத்திற்காகப் பயன்படுத்தவில்லை.. ஆவேசாமாக சிலிர்த்து பேசுபவர் இல்லைஎன்றாலும் எல்லோரையும் கவரும் இயல்பான நல்ல மேடைப்பேச்சாளர் . 80களில், பெரிய கட்சி ஒன்றில் இணைந்திருந்தால் அவரின் திறமைக்கும் அறிவிற்கும் அவர் ஒரு அமைச்சராக இருந்திருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.

இப்போதும் அவரின் அரசியல் நிலைப்பாடு பற்றி விமர்சிக்கும் பலர் அவர்மேல் அன்பும் மரியாதையும் கொண்டவர்கள், காரணம் “மணிவண்ணன் ஒரு உண்மையான தமிழ் இனப் பற்றாளன். கருத்தியல் ரீதியாக அவருக்கு சரி என்று படும் இடத்தில் அவர் இருப்பாரே தவிர, எப்போதும் அரசியல் ஆதாயத்திற்காக அல்ல” என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அத்தகைய நேர்மையும், சுயமரியாதையும் கொண்ட புகழ்மிக்க மனிதர்களைக் காண்பது அபூர்வம்.

“தமிழர் நலன்” என்னும் வார்த்தையில் அவர் மேல் வைத்திருக்கும் அபிமானம் அளப்பரியது. அவரின் இன உணர்வு, மொழி உணர்வு அசாத்தியமானது. அதற்காக யார் முன்னிலையிலும் தன் கருத்தை வலியுறுத்த தயங்காதவர். அவரின் நண்பர்கள் பலர் பல சம்பவங்களைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதில் பல மிக மிக திகைப்பானவை.

ஈழத் தமிழர்கள்பால் அவர் வைத்திருக்கும் அன்பு ….. சொல்ல வார்த்தைகளே இல்லை.இயல்பிலேயே தைரியமான குணாதிசயம் கொண்ட அவர், சமீப காலங்களில் கண்ணீர்விட்டுக் கதறிய சம்பவங்களில் பெரும்பான்மை ஈழத் தமிழர் சார்ந்தவை என்பதுதான்.

நன்றி மறவாமை, குருபக்தி, நட்பிற்குத் தரும் முக்கியத்துவம், இயல்பான நகைச்சுவை உணர்வு, புத்தகங்களின்பால் காதல், உணர்ச்சியும் அறிவும் கலந்த ஞானம், இத்தனையும் கலந்த கலவைதான் “மணிவண்ணன்” என்னும் எளிய மனிதன்.

தான் வாழும் சமூகத்தின் ஒவ்வொரு அசைவையும் எந்தவித சமரசம் இல்லாமல் பிரதிபலிப்பவனே சிறந்த கலைஞன். அதை சினிமாவிலும் நிஜ வாழ்விலும் தன் இறுதி மூச்சுவரை பிரதிபலித்த உன்னத கலைஞன் “மணிவண்ணன் சார்”

அவரோடு பழகிய பலர் என்னிடம் பேசும்போது “உன்னிடம் அதிகம் மணிவண்ணன் சாரோட டச் இருக்கு என்று சொல்லியிருக்கிறார்கள். நான் அதில் எந்தவித ஆச்சர்யமும் அடைந்ததில்லை. இயல்பிலேயே இடதுசாரி சிந்தனையும், கடவுள் மறுப்பும்,அசட்டுத்தனமும் திமிரும் சரிவிகிதக் கலவையில், கொஞ்சம் மார்க்ஸியச் செதுக்கலும் பெற்று , மனதில் பட்டதைப் பேசி, “யாவாரம் தெரியாத உதவாக்கரை” என்று முடிசூட்டப்பட்ட எல்லோரும் “மணிவண்ணன் டச்” உள்ளவர்களாகத்தான் இருக்க முடியும்.

“மணிவண்ணன் டச்” உள்ளவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் மணிவண்ணனாக வாழ்வது மிக மிக மிகக் கடினம் ….. அதற்கு போலித்தனமில்லாத அசாத்திய நேர்மை தேவை.

வீர வணக்கம் மணிவண்ணன் சார்…

 

 

 

Posted in Uncategorized | 8 பின்னூட்டங்கள்

குரலால் பார்க்க வைத்தவன் ….

படம்

“என்ன ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா வெளியே கிளம்பிட்டீங்க?”

“டி எம் எஸ் ஐயாவ கடைசியா ஒரு தடவ பாத்துட்டு வர “

“ ஓ….. so sad … நேத்தியிலிருந்து டிவில தொடர்ந்து அவரப்பத்தி காமிச்சுட்டே இருந்தாங்க… எங்க அப்பா அவரோட பெரிய fan…. ஆமா, அவர உங்களுக்கு தெரியுமா ”

“ ம்…. “

“எப்போத்திலிருந்து ….”

“போய்ட்டு வந்து பேசறேன்க்கா” ….

வீட்டைப் பூட்டி வெளியே கிளம்பும்போது பக்கத்து வீட்டு அக்காவுடன் நேற்று காலை நடந்த சம்பாஷனை இது …

மந்தைவெளியில் உள்ள அவரின் வீட்டிற்கு போகும் வழி நெடுக எனக்குள்ளே பல முறை இந்தக் கேள்வி வந்துபோய்க்கொண்டே இருந்தது

“””” எப்போதிலிருந்து டிஎம்எஸ் எனக்குத் தெரியும்?”

பின்னோக்கிய யோசனை எந்த இடத்திலும் நிற்காமல் சர்ர்ரெனப்போய் ஒரு இருட்டறையில் நின்றது…… ஆம்

“என் தாயின் கருவறையிலிருந்து அவரை எனக்குத் தெரியும்”

எனக்குமட்டுமல்ல, 60 களின் ஆரம்பம் தொடங்கி , தமிழ்ச் சூழலில் உருவான எல்லா சிசுக்களுக்கும் பொருந்தும் விடை இது.

மந்தைவெளியில் படுத்திருப்பவன்,வயோதிகம் பற்றி முற்றிச் செத்த வயோதிகன் அல்ல. காசுக்காகப் பாடிவிட்டு கண்மூடிய ஒரு பாட்டுக்காரன் அல்ல. இசை தேரிந்து தேர்ந்த விற்பனன் ஒருவன், வாய்ப்புத்தேடித் தெருத்தெருவாய் அலைந்து , பின் அவர்கள் எல்லோரையும் தன்னைத்தேடி அலையவைத்த அகம்பாவ சாதனையாளன் மட்டுமல்ல.

அவன் ……

சில தலைமுறைகளின் கருவில் கலந்து கரைந்த நாதபிரும்மம். .

ஒரு மொழியின் உத்திரவாதம் .

ஓராயிரம் தமிழாசிரியர்கள் சேர்ந்த ஒற்றை உருவம்.

என் மொழியை எனக்குக் கற்றுத்தந்த ப்ரதான குரு.

இசைத்தமிழை இன்னும் அழகுபடுத்திய அழகன்.

என் மொழியின் “ழ” அவன் .

கலங்கிக் கதறாமல் இருக்க நான் உயிருள்ள மரக்கட்டையா என்ன…

அவரின் இறப்பு செய்தி கேட்ட நொடி முதல் , இதோ இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்தக்ஷணம் வரை அந்தக் குரலின் ஆக்கிரமிப்பில் சுழற்றியடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்….

“எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் எப்படி குரலை வேறுபடுத்திப் பாடினீங்க”

லட்சத்துக்கும் அதிகமான தடவை கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன அதே கேள்வியை, அந்தக் காது என் குரலிலும் கேட்டுத் தொலைக்கவேண்டிய நிர்பந்தம் வந்தபோதும்,

சிரித்துக்கொண்டே என்னிடம்

“அது இருக்கட்டும்…. சிவாஜி குண்டா இருக்குபோது ஒரு வாய்ஸ்லயும் , ஒல்லியா இருக்கும்போது ஒரு வாய்ஸ்லயும் பாடியிருப்பேன். கவனிச்சிருக்கியா”…..

“……………!!!!!?????!!!!!!!!………”

லேசாக செருமி “உள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது ஊமை” என்று பாடிவிட்டு “ …. “இது சிவாஜி குண்டா இருக்கும்போது”

உடனே, கொஞ்சம் மெலிதாக , ஆனால் கூர்மையாக, “வெள்ளிக் கிண்ணம்தான். தங்கக் கைகளில்” ….. “ இது சிவாஜி ஒல்லியா இருக்கும்போது” என்று சொல்லிவிட்டு என்னைக் கூர்ந்து பார்க்க , நான் கண்கலங்கி வாய் பிளந்து நிற்க …. ஹாஹ்ஹாஹ்ஹா என்று அவர் உரக்க சிரிக்க … ஜென்ம சாபல்யம் ..

அவர் இறந்த நேற்று முன் தினம் (25/05/2013) இரவு முழுவதும் அவருடைய பாட்டுக்களைக் கேட்டபடியே இருந்தேன். குறிப்பாக 50 களில் அவர் பாடிய பாடல்கள் எனக்கு ஆத்மப்ரியம்.

படம்

“கொஞ்சும் கிளியான பெண்ணை”

“முல்லை மலர் மேலே”

“தில்லை அம்பல நடராஜா”

“எளியோரைத் தாழ்த்தி”

“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்“

“நாடகமெல்லாம் கண்டேன்”

“ஏரிக்கரையின்மேலே”

“வீடு நோக்கி ஓடி வந்த என்னையே” (சோகம்)

“மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு”

“சித்திரம் பேசுதடி”

“கனவின் மாயாலோகத்திலே நாம்“

“நான் பெற்ற செல்வம்”

ஒவ்வொரு பாடலைக் கடக்கும்பொழுதும் ,“நாளை இதைப் பாடிய நாவும் நாசியும் தொண்டையும் உருவமும் தீயினால் சுட்டெரிக்கப்பட்டு சாம்பலாய்ப் போய்விடும் என்பதை நினைக்க நினைக்க, ஜீரணிக்க இயலாமல் குமட்டிக்கொண்டு வந்தது. தொண்டைக்கும் நெஞ்சுக்கூட்டுக்கும் நடுவே யாரோ ஏறி நிற்பதுபோல ஒரு நிலையில்லாப் பெரும்பாரம் அழுத்தியபடியே இருந்தது. கண்ணீரின் பாதைக்கு மட்டும் எந்தவித இடையூறுமில்லை.

இப்படி அடுக்கிக்கொண்டே சென்று 60 களுக்குள் நுழையும் சமயம், பொழுது விடிய ஆரம்பித்திருந்தது.

அப்படியே பாடல்கள் தொடர, ஓரிடத்தில்

“தாய் முகத்தைப் பார்க்காமல்
யார் முகத்தைப் பார்த்தழுவேன்
நீ கொடுத்த நிழலைவிட்டு
யார் நிழலில் போயிருப்பேன் – அம்மா
யார் நிழலில் போயிருப்பேன்”

என்ற பாடலில் , “அம்மா” என்னும் இடம் வரும் ஒவ்வொரு தடவையும் கண்கலங்காமல் இருந்ததில்லை. நேற்று மடை உடைந்து கொட்டிற்று.

“கண்ணின் மணி போல
மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும்
மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா – உறவை
பிரிக்க முடியாதடா”

இதை எழுதும்பொழுது என் நுனிமூக்கு வெம்மிப்புடைத்து, பொத்துக்கொண்டு கண்ணீர் வருவதை தடுக்கும் திராணி எனக்கில்லை.

எழுத்துக்கள் ,வார்த்தைகள் , வரிகள் ….அவை டிஎம்எஸ்ஸின் குரலில் உருவம்பெற்று உலவ ஆரம்பிக்கின்றன. இதை எனக்குத் தெரிந்தவரை எந்தப் பாடகரும் பாடகியும் இதுவரை செய்ததில்லை.

“சொல்லிக்குடுத்தபடி ஸ்ருதி சுத்தமா பாடுறதுக்கு டிஎம்எஸ் தேவையில்லைய்யா. அதுக்கு நெறையப்பேர் இருக்காங்க” என்று அடிக்கடி சொல்வார்… பேசும் வார்த்தைகளில் அவ்வளவு திமிர் , கர்வம் , அகம்பாவம் தெரியும்……… தெரியணும் … தெரிஞ்சாத்தான் டிஎம்எஸ்… உப்புக்குக்கூட லாயக்கில்லாத பலர் இன்று செய்யும் ஆர்ப்பாட்டங்களைப் பார்க்கும்போது, “நீ என்னவேணாலும் சொல்லு ராசா” என்றுதான் எனக்கு சொல்லத்தோன்றும்.

இன்னொரு முறை அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது (கேள்வி கேட்டு படுத்திக்கொண்டிருந்தபோது என்பதுதான் சரி) அவரின் முதல் பாடலான “ராதே நீ என்னைவிட்டுப் போகாதெடி” பற்றிக் குறிப்பிடுகையில்

“…… உனக்குத் தெரியும் அது பாகவதர் பாடிய “ராதே உனக்குக் கோபம் ஆகாதடி” பாட்டின் இன்னொரு வெர்ஷன், காப்பின்னு (remix)…. நான் பாடியதை கேட்டு முடித்தபின் அதை ஒலிப்பதிவு செய்த சவுண்ட் இஞ்சினியர்

“இதுவும் அப்படியே பாகவதர் பாடின மாதிரி டிட்டோவா இருக்கு. எதாவது டிஃபரென்ஸ் வேண்டாமா” என்றார். இசையமைப்பாளர் உட்பட எல்லோரும் ஆமோதித்தோம்.

சரி இன்னொரு டேக் போகலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, அந்த சவுண்ட் இஞ்சினியர் “எனக்கு ஒரு ஐடியா” என்று சொல்லிவிட்டு, டேப்பை (tape) ரீவைண்ட் செய்து, மிக மிகக் கொஞ்சமாக டேப்பின் சுற்றுவேகத்தை(RPM) அதிகரித்து ப்ளே (play) செய்து காண்பித்தார். என் வாய்ஸ் கொஞ்சம் ஷார்ப்பாக கேட்டது.

இசையமைப்பாளரும் “அடடே இது நல்லா இருக்கே, வாய்ஸும் வேறமாதிரி கேட்குது. இதே டெம்போ ல காப்பி போட்டுடுங்க” என்றார். அப்படி வந்த அவுட்புட் (output) தான் என் முதல் பாடல். நான் பாடி வெளிவந்த முதல் பாடல், நான் பாடிய ஒரிஜினல் டெம்போவில் (tempo) இல்லை”” என்றார்.

அதன்பின் அவரின் பல பேட்டிகளைப் படிக்கும்போதும் பார்க்கும்போதும் இந்த சம்பவத்தைக் குறிப்பிடுவாரா என்பதை கவனித்தேன். இதுவரை என் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை . அவரின் வாயால் இதைக் கேட்ட அனுபவம் இன்னும் என் கண்ணுக்குள்ளே நிழலாடிக்கொண்டிருக்கிறது.

“டிஎம்எஸ் ஒரு நல்ல பாடகரே அல்ல” என்று சொல்லும் சிலரை எனக்குத்தேரியும். “கத்துவது போலப் பாடுவார்” என்று என்னிடம் சொன்ன சங்கீத விற்பனர்களும், பாடகர்களும் இருக்கிறார்கள்.

அவர்கள் பாடிய பாடல்களைக் கேட்கும்போது ஒன்று விளங்கியது. இவர்களுக்கு டிஎம்எஸ் புரியாதது ஞாயம்தான். ஸ்ருதி சுத்தமும் ராகபாவங்களும் , கேட்பவர்கள் மிரளும் அளவுக்கு இவர்களின் குரல் ரசிக்கச் செய்கிறதே தவிர, அது உள்ளே சென்று உயிரைத்தொடவில்லை. அது அவர்களுக்கு அவசியமும் இல்லை. ‘இசை ரசிக்க மட்டும்தானே என்பது அவர்களின் கருத்து … இருக்கட்டும் … தவறில்லை…. ஆனால் டிஎம்எஸ் அப்படி அல்ல…. அதையும் தாண்டி… அந்த எல்லை வேறு…

நேற்று அவரை கடைசியாக வணங்கச் சென்றபோது, வீட்டின் வெளியே ஆட்டோக்காரர்களும், கைவண்டி இழுப்பவர்களும் கூலி வேலை செய்யும் பெண்களும், குப்பத்து ஜனங்களும் வேகாத வெயிலில் பெரும் திரளாக குழுமி இருந்தனர். அதில் சிலர் “டி எம் எஸ் ஐயா , போய்ட்டீங்களே” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதபடி இருந்தனர். பலரின் கைபேசியில் டிஎம்எஸ் பாடல்கள் ஒலித்தபடி இருந்தது.

ஒருவர் உரக்க அவரின் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றி சிலபேர் தலைகவிழ்ந்தவண்ணம் கண்ணீரோடு கேட்டுக்கொண்டிருந்தனர்.

டிஎம்எஸ் ஐயாவின் உடல் வைக்கப்பட்ட குளிர்பெட்டிக்கு அருகில் சென்று அவரின் முகத்தைப் பார்த்தேன். தன் குரலால் எல்லோரையும் கட்டிப்போட்ட அந்த உருவம் நாடி கட்டப்பட்டு , தன் இறுதி யாத்திரைக்குத் தயாராக இருந்தது. அருகில் அவரது துணைவியாரும் மகனும் இருந்தனர். கண்ணீரோடு கையெடுத்துக் கடைசியாக வணங்கினேன்.

வெளியே வந்து நின்றுகொண்டிருந்தேன் . என் அருகில் ஒருவர் காம்பவுண்டுச் சுவரில் சாய்ந்தபடி கண்கலங்கிக் கொண்டிருந்தார். அழுக்கான சட்டை, பழைய செருப்பு, கலைந்த தலை… எட்ட நின்று அந்தப் பெட்டியைப் பார்த்தபடி அழுதுகொண்டே இருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

“நான் ஈரோடுங்ணா, லோடுமென் வேல பாக்குறேன். நேத்து சாயங்காலம் விசயம் கேள்விப்பட்டதுமே, நைட்டு லாரி புடிச்சு காலைல வந்துட்டேனுங்க”

“ ஐயாவ அவ்வளவு புடிக்குமா”

உசுருங்க….அவரு பாட்டு கேக்காம எனக்கு விடியாது. இப்போ அம்பத்தஞ்சு வயசு ஆகுது. பேரன் பேத்தி எடுத்துட்டேன், ஆனா முப்பது வருசமா, ஒவ்வொரு வருசமும் ஒரு நாள் ஈரோட்ல இருந்து ஐயா வீட்டுக்கு வந்து அம்மா கையால ஒரு சொம்பு தண்ணிவாங்கி குடிச்சுட்டு போய்ருவேன். ஐயா இருந்தா ஒரு கும்பிடு மட்டும் போடுவேன்”

“ஐயாகிட்ட பேசிருக்கீங்களா”

“இல்ல”

“மத்த பாட்டெல்லாம் கேப்பீங்களா”

“பழைய பாட்டுதான் அதிகமா கேப்பேன். மத்த பாட்டும் கேப்பேன்”

“இவர மட்டும் உங்களுக்கு அதிகமா புடிக்கிறதுக்கு என்ன காரணம்”

இந்தக் கேள்விக்கு அவர் தந்த பதிலைத்தான் இந்தக் கட்டுரையின் தலைப்பாகவும் கடைசி வரியாகவும் இருக்கவேண்டுமென்று முடிவு செய்தே இந்தக் கட்டுரையை ஆரம்பித்தேன்.. இதுதான் டிஎம்எஸ் என்னும் ஒப்பற்ற சாதனையாளனுக்கு நான்செய்யும் மரியாதை.

அவரின் பதில் இதுதான்

“”””“குரலால பார்க்கவைக்கிறது, இந்த ஒரு மனுசனால மட்டும்தான் முடியும்”””””

…………………………………………..
…………………………………………………
படம்

Posted in Uncategorized | 29 பின்னூட்டங்கள்