நடத்தை …

வெகு நாட்களக எழுதி வைத்திருந்த கட்டுரை  இது. ஆனால் என்ன          காரணத்தினாலோ வெளியிடாமல் தள்ளிப் போட்டுக்கொணடேவந்தேன் . குறிப்பான காரணம் எதுவும் இல்லை.  ஆனால் சுதந்திரம் பற்றியேல்லாம் பேசி,  களைத்து, கொண்டாடி, எதிர்த்து ஒரு வழியாக முடிந்த இன்று (16-08-2012) பதிவிடுது சரியாக இருக்கும் என்று தோன்றியது.

சரி…… விஷயத்துக்கு வருகிறேன்.

சில மாதங்களுக்கு முன், பெங்களூரில், ஒரு முக்கிய பிரமுகருடன் அவரது காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். அவரின் நெருங்கிய நண்பர் ஒருவரும் எங்களோடு இருந்தார். அவர் மிகப் பெரிய செல்வந்தர்.கார் மைசூரை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. அந்த முக்கிய பிரமுகர் தனக்குப் பிடித்த பழைய ஹிந்திப் பாடல்களைக் கேட்டு ரசித்தபடி இருந்தார்.

சிறிது நேரத்திற்குப் பின் அவரது நண்பர் அவரிடம்”இன்னும் இப்படிபழைய பாட்டுக்களையே கேட்டுகிட்டிருக்கீங்க. இப்போ புது பாட்டுக்கள் என்னவெல்லாமோ வந்திருக்கு. அதையும் கேளுங்க” என்று சொல்லிக்கொண்டே தன்னிடம் இருந்த புது ஹிந்திப் பாடல்கள் அடங்கிய சிடியை எடுத்துக் கொடுத்து போடச் சொன்னார். பாடல்கள் ஓட ஆரம்பித்தன. அந்த முக்கிய பிரமுகரும் அதை ரசிப்பதுபோல் பாவனை செய்தபடி இருந்தார்.

வேலைகள் முடிந்து பெங்களூர் திரும்பினோம்.  வழியில் ஒரு பிரம்மாண்டமான வீட்டின் முன் கார் நிற்க , அவரின் நண்பர் இறங்கிக் கொண்டார். கார் கிளம்பியதும் அந்த முக்கியய பிரமுகர் என்னிடம்

“பார்த்தீர்களா அவர் நடத்தையை”

“என்ன சார்”…

“அவர் என்னைவிட அந்தஸ்திலும் பணத்திலும் உயர்ந்தவர்தான். ஆனால் அவர் பயணித்தது என் காரில். அதில் எனக்குப் பிடித்த பாடல்களை நான் போட்டு கேட்டுக்கொண்டு வருகிறேன். அதில் தலையிடுவது அநாகரீகம் என்றுகூட அவருக்குத் தெரியவில்லை பாருங்கள். ……” தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

எனக்கு வெகு நாட்களுக்கு முன் படித்த வரலாற்றுப் பகுதி ஒன்று நினைவுக்கு வந்தது.

தந்தைப் பெரியாரின் வீட்டுக்கு ‘ரசிகமணி’ டிகேசி அவர்கள்  ஒருமுறை வந்து தங்கினார். காலையில் அவர் குளித்துமுடித்து வந்தபோது , கையில் விபூதி பழத்துடன் காத்திருந்தார் பெரியார்.  ஆச்சர்யத்துடன் “இது உங்களுக்குப் பிடிக்காத விஷயமாச்சே ” என்றார் டிகேசி.

பெரியார் சிரித்துக்கொண்டே “உங்களுக்கு இது பிடித்த விஷயம் அல்லவா. அதனால் பக்கத்து கோவிலில் இருந்து தருவித்தேன்” என்றார். ஏனென்றால் திரு.டிகேசி அவர்கள் தீவிர சிவ பக்தர் என்பது பெரியார் அவர்களுக்கு நன்கு தெரியும். தீவிர கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியாரின் நடத்தை இது.

இன்னும் பல சம்பவங்கள்  என் நினைவில் வந்துபோகிறது.

இந்த நடத்தையின் உன்னத கணத்தைத்தான்  நம் அழகுத்தமிழ் “நயத்தகு நாகரீகம்” என்கிறது. இந்த நடத்தைக்கும் கல்விக்கும், அறிவிற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று யோசித்தால் ‘இல்லை’ என்பதை உறுதியாக சொல்லமுடியும்.

தன் ஆட்டோவில் பயணித்தவர் விட்டுச்சென்ற பல லட்சம் மதிப்புள்ள  பணத்தையும் நகைகளையும், திரும்ப தேடிச்சென்று ஒப்படைத்த  அதிகம்  படிக்காத ஏழைத் தோழர் ஒருவரை நான் சந்தித்திருக்கிறேன். எப்படி அதை செய்தீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் “அது என்னோடது இல்லையே தம்பி”…

அந்த வார்த்தைகள் என் முகத்தில் அறைந்ததுபோல இருந்தது. எவ்வளவு பெரிய வார்த்தைகள் அவை. இந்த உயரிய பண்பை அவர் எங்கிருந்து கற்றார்?  இத்தனைக்கும் மிக மிக ஏழைக் குடும்பத்தைச் செர்ந்தவர் அவர்.

இப்படிப்பட்ட நம் மரபு சார்ந்த பண்புகள் எல்லாம் சமீபகாலமாக குறைந்து குறைந்து, மிருகங்களை விட கீழ்த்தரமான நிலைக்கு நாம் போய்க்கொண்டு இருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

இந்த பண்பு எங்கிருந்து வருகிறது, எதனால் குறைகிறது என்பதற்கு மனோ உளவியல் வல்லுனர்கள் பல காரணங்கள் சொல்லுகிறார்கள். அதற்குள் நான் போக விரும்பவில்லை.

ஆனால் ஒன்றுமட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். நமக்குள் இருக்கும் மனசாட்சி என்கிற ஒரு விஷயம் சமீக காலமாக செத்துக்கொண்டிருக்கிறது.  அதற்கு நம் அரசியல்-பொருளாதாரச் சூழல் , ஏன் நம் கல்வியும்கூட காரணமாக இருக்கிறது என்பதுதான் வேதனையான உண்மை.

“நான் வெற்றிபெற்று முதலமைச்சரானதைவிட  திரு.காமராஜர் அவர்களின் தோல்வி எனக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுக்கிறது” என்றார் பேரறிஞர் அண்ணா. அந்த நயத்தகு நாகரீகம் அதற்குப் பின் 40 வருடங்களுக்கு மேலாக காணாமல் போனதற்கு என்ன காரணம்?

“தன் பொருள் தனக்கல்ல” என்கிற ஒரு ஆட்டோ ஓட்டும் தோழருக்கு இருக்கும் மனநிலை கூட இன்றைய அரசியல்வாதிகளுக்கோ ஆள்பவர்களுகோ இல்லையே ஏன்? அப்படி இருப்பவர்கள் கோமாளிகளாக அவமதிக்கப்பட்டு ஓரங்கட்டப்படுகிறார்களே ஏன்?

நமக்கு முந்தைய தலைமுறையினருக்கும் நமக்கும் இடையே ஏதோ ஒன்று இடிக்கிறது… மார்க்ஸையெல்லாம் வம்புக்கு இழுத்து ‘தலைமுறை’ இடைவெளி என்கிற கோணத்தில் அதைப் பார்த்தாலும் , அதில் ஏதோ தேய்மானம் இருப்பதாகவே படுகிறது.. உள்ளார போய் குழப்பாமல் மேலெழுந்தவாரியாக மட்டுமே பார்க்கலாம்.

நவீனமும் உலமயமாக்கலும் நம் மனதின் எல்லாப்  பகுதியையும் ஆக்கிரமித்து நம் இயல்புகளிலும் மரபுகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மறுக்கவில்லை. இதையே 60 களின் மத்தியில் ஃப்ரான்ஸும் அதற்கு முந்தைய காலகட்டத்தில் அமேரிக்காவும் இன்னும் சில ஐரோப்பிய நாடுகளும் அனுபவித்திருக்கின்றன என்பதைப் படித்திருக்கிறோம்.

ஆனால் அது அவர்களின் அடிப்படை பண்புகளை மாற்றியிருக்கின்றனவா என்று பார்த்தால் ,ஓரளவு மாற்றியிருக்கின்றது என்பது உண்மையே. ஆனால் நம்மிடையே  ஏற்பட்டுள்ள மாற்றம் மிக கொடூரமானதாக எனக்குத் தோன்றுகிறது.

கொடூரம் என்பது சற்று கடுமையான வார்த்தையாக இருப்பினும் அதை பயன்படுத்தியே ஆகவேண்டிய கட்டாயமாகிறது.

இன்றைய நவீனம் நம்மிடையே பல குறைகளை நம்மை அறியாமல் நமக்குள் புகுத்திவிட்டதாகவே நான் கருதுகிறேன். வாழ்க்கை பற்றிய தவறான புரிதல்களை சரியென்று சொல்லி நம்ப வைக்கிறது. உதாரணத்திற்கு நான் எடுத்துக்கொள்ளும் வார்த்தை ‘மரியாதை’.

இன்று நம் சக மனிதனை மதிப்பது என்பது ‘அவமதிப்பு’ என்று  நவீனம் நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது என்று நான் சொன்னால் அதை நீங்கள் நம்புவீர்களா?.. நம்பித்தான் ஆகவேண்டும். உதாரணத்திற்கு சில கேள்விகள்.

  1. நம்மில் எத்தனை பேர் புதியவர்களையோ, பெரியவர்களையோ கைகூப்பி வரவேற்கிறோம் ?.
  2. நமக்கு வரும் தொலைபேசி அழைப்பை நம்மில் எத்தனை பேர் ‘வணக்கம்’ சொல்லி எடுத்து பேசுகிறோம்.?
  3. நம் வீட்டில் நடைபெற்ற நல்ல விஷயங்களுக்கோ அல்லது துன்ப நிகழ்விற்கோ வந்து சென்றவர்களுக்கு நன்றி அறிவித்திருக்கிறோம்?
  4. நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நம்மில் எத்தனை பேர் இப்படிப்பட்ட ‘மரியாதை’களை கற்றுக்கொடுத்திருக்கிறோம்?

இதுபோன்ற பல கேள்விகள் என்னுள்ளே எழுவதற்குக் காரணம் நான் பார்த்து வளர்ந்த மனிதர்களும், இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் மனிதர்களும்தான்.

நம்முடைய புறச்சூழல் நம்மை இந்த நிலைக்குக் கொண்டுவந்து தள்ளிவிட்டதை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இல்லை. ஆனால் அதையும் மீறி நாம் அதற்கு கொடுக்கின்ற விலை, நம்முடைய இயல்பை மட்டுமல்ல நம் சுயத்தை சாகடிக்கிறது என்கிற வேதனை என்னுள்ளே கடந்த சில வருடங்களாக இருந்துகொண்டே இருக்கிறது.

தன்னுடைய குழந்தைக்கு இப்படிப்பட்ட அடிப்படையான விஷயங்களைக் கூட கற்றுக்கொடுக்க திராணியற்று, “அது அவனுக்கு பிடிக்காது” “அவன் நான் சொன்னா எங்க கேக்கப்போறான்” என்று சொல்லும் பெற்றோர்களைப் பார்க்கும்போது,  அவர்கள் பெரும் குற்றவாளிகளாகத்தான் என் கண்ணுக்கு  தெரிகிறார்கள்.

தன் குழந்தையின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் நடந்துகொள்வதுதான் பாசம் என்று நினைப்பவர்கள், தன் முன்னோர்களும், தன் பெற்றோர்களும் காலம் காலமாக பின்பற்றும் உயரிய குணங்களை உணர்ந்து,  அதை தன் குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்துவதுதான் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய கடமை என்பதை ஏன் மறுக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. அதுதானே உண்மையான பாசம்.?

ஒரே மகன், ஒரே மகள் என்று சொல்லும் தற்காலப் பெற்றோர்கள், அப்படி பொக்கிஷமாக கிடைத்த குழந்தையை எப்படி நடத்தையோடு வளர்க்கவேண்டும் என்பது தெரிந்து வைத்திருக்க வேண்டாமா?

(தொடர்கிறேன்)

About arrawinthyuwaraj

be happy and make others happy
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

10 Responses to நடத்தை …

  1. Priya சொல்கிறார்:

    That was a lovely writeup Arrawinth !! Nice musings..:))

  2. anuradha niketh சொல்கிறார்:

    good one.. about parents being accomodative to their kids.. i have a different opinion.. will discuss in detail..

  3. ranjani135 சொல்கிறார்:

    மிக நல்ல பதிவு அரவிந்த்!

    ‘செல்லம்’ என்ற பெயரில் குழந்தைகளுக்கு நல்லவற்றை சொல்லிக் கொடுக்கத் தவறுகிறோம். நீங்கள் சொல்லியிருக்கும் நான்கு பாயிண்ட்களும் மிகவும் உண்மை.

    பாராட்டுக்கள்!

    • arrawinthyuwaraj சொல்கிறார்:

      நன்றி திருமதி.ரஞ்சனி,
      வேர்கள் தேவையில்லை என்பது நவீனத்தின் மறைமுக சாபம்…
      அது நீங்கள் குறிப்பிட்ட ‘செல்லம்’ என்னும் ஒரு வார்த்தைக்குள் அடங்கிவிடுகிறது…
      பின்னூட்டத்திற்கு நன்றி..

  4. பாரதிபிரியை சொல்கிறார்:

    arumaiyaan thodar. thodarnthu eluthungal sir.

  5. சுப்புலட்சுமி வசந்தன் சொல்கிறார்:

    அற்புதமான பதிவு.உங்கள் பதிவிலிருந்து என் குழந்தையை எப்படி நான் வளர்க்க வேண்டுமென்பதை அறிந்து கொண்டேன்.ரொம்ப நன்றி

Priya -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி