நடத்தை – 2

தொடர்ச்சிக்கு முன் சில வரிகள்….

இந்த இரண்டாவது பகுதியை முன்னமே எழுதி முடித்திருந்தாலும், முதல் பகுதியின் பின்னூட்டங்கள் எப்படி இருக்கும் என்று கவனித்துவிட்டு, அதற்குபின் இதைப் பதிவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படி எந்தவித விபரீதமும் நடக்காமல், அதிகமாக பாராட்டுக்களே கிடைத்த ஏமாற்றத்துடன் (!) இதைத் தொடர்கிறேன்…..

(தொடர்ச்சி)

2 ஆண்டுகளுக்கு முன் நான் எனக்கு நடந்த சம்பவம்.

மதுரையில் எனக்குத் தெரிந்த ஒருவரின் வீட்டிற்கு நான் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. என் சிறுவயதில் அந்த தம்பதிகளைப் பார்த்தது. இப்போதுதான் மீண்டும் அவர்கள் வீட்டிற்குச் செல்கிறேன்.

அதே பழைய அன்பும் ஆசையும் குறையவே இல்லை. சிறு வயதில் கொஞ்சியதைப்போலவே அந்த அத்தை என் கன்னங்களைக் கிள்ளி முத்தமிட்டார், மாமா கட்டியணைத்துக் கொண்டார். இருவர் கண்களிலும் கண்ணீர். எனக்கும்….

அருமையான காபி வந்தது. காபியைக் குடித்தபடி அவர்களின் ஒரே மகள் பற்றி விசாரித்தேன்.திருமணமாகிப் பல வருடங்கள் கழித்துப் பிறந்த குழந்தை அவள்.

குழந்தையில் அவ்வளவு அழகாக இருப்பாள். “டே நீ சின்னப்பையன், உனக்கு தூக்க வராது. அப்படியே பாப்பாவை கொஞ்சிக்கோ” என்று அத்தை செல்லமாக அதட்டியது இன்னும் நினைவிருக்கிறது .இப்போது இளங்கலை பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கிறாள் என்று சொன்னார்கள்.

“எங்கே, ஹாஸ்டல்லையா இருக்காப்ல?

“டேஸ்க்காலர்தான்டா,”

” எங்கே போயிருக்கு, எப்போ வரும் ?”

“அட இங்கதான் இருக்கு, இரு கூப்பிடுறேன்”

என்று சொல்லிக்கொண்டெ எழுந்த அத்தை, முன்னே இருக்கும் அறையின் வாசலுக்குச் சென்று அவள் பெயரைச் சொல்லி “யார் வந்திருக்காங்க பாரு” என்று சொல்ல, உள்ளே இருந்து எந்த பதிலும் இல்லை.

அந்தத் திறந்த கதவின் எதிரில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியின் (covered tv stand) பக்கவாட்டுக் கண்ணாடி மூடியில், (ஒலி அமைப்பிற்காக ஒரு பக்கம் சாய்வாகத் திறக்கப்பட்டிருந்த சிறிய கண்ணாடிக் கதவு) அறையின் உள்ளே என்ன நடக்கிறது என்று எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.

ஜீன்ஸ் டி-சர்ட் அணிந்த அந்தப்பெண், தன் மடிக்கணிணியில் எதோ பார்த்தபடி இருந்தவள் அத்தையின் சத்தம் கேட்டுத் திரும்பினாள். அத்தை வா என்று சைகை காட்ட “என்ன” என்பது போல சைகையில் கேட்டாள்.

அத்தை கொஞ்சம் கொஞ்சலாக “இங்க யார் வந்திருக்கான்னு வந்து பாரேன் பாப்பா” .

அத்தை என் பக்கம் சிரித்தபடியேதான் இதைச் சொல்கிறார்.

உள்ளிருந்த அந்த பெண் தன் நெற்றியில் அடித்துக்கொள்கிறாள். முறைத்தபடி தன் கையை அத்தையை நோக்கி ஏதேதோ கோணங்களில் ஆட்டி, உதடு அசைய சத்தமில்லாமல் திட்டுகிறாள்.

அத்தை அந்த அறையின் வாசலில் நிற்பதால் எனக்குத் தெரிந்துவிடும் என்பதற்காக சிரித்தபடியே அவள் திட்டுவதை வாங்கிக்கொள்கிறாள்.

“சரி ட்ரெஸ்ஸ மாத்திட்டு வாம்மா” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு என்னைப் பார்த்து

“நைட்டில இருக்காடா. ட்ரெஸ் பண்ணிட்டு வருவா” என்றபடி மீண்டும் உள்ளே பார்த்தார்.

மறுபடியும் அந்தப்பெண் “கொன்றுவிடுவேன்” என்று சொல்வதைப்போல ஆள்காட்டி விரலைக்காட்டி சைகை செய்துவிட்டு “போய்த் தொலை ” என்கிற அர்த்தத்தில் வலதுகையை அசைத்தாள்.

எதையும் காட்டிக்கொள்ளாமல் அத்தை என்னருகில் வந்து அமர்ந்தபடியே “கொஞ்சம் தலைவலி அவளுக்கு” என்றார்.

மாமாவும் “போன வாரம் முழுக்க அவளுக்கு எக்ஸாம்.நைட்டெல்லாம் படிச்சால்ல, அதான்”…

நான் எதுவும் சொல்லவில்லை.

ஒரு சில நிமிடங்களுக்குப்பின் அதே ஜீன்ஸ்ஃபேண்ட் டி-சர்ட் சகிதம் அந்தப் பெண் வந்தாள்.

என்னைப் பார்த்து லேசாக புன்னகைத்தபடியே “ஹலோ, …. நல்லா இருக்கீங்ளா”

“நல்லா இருக்கேம்ப்பா, என்னை நினைவிருக்கா”

“இல்ல சரியா தெரியல” … பேசிக்கொண்டே அவள் அப்பாவிடம் திரும்பி “வண்டி கீ எங்க” என்றாள். மாமா தன் ஃபேன்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்துக்கொடுக்க, என்னைப் பார்த்து

“நான் வரேன். சீ யூ தென்” என்று சொல்லியபடியே வெளியே போய் தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டாள்.

“அவசரமா எதோ ரெஃபர் பண்றதுக்கு போறாடா” என்று சொல்லியபடி அத்தை மாமாவைப் பார்க்க, மாமா உடனே

“டேய் சாப்டுத்தான் போற நீ”

அத்தையும் “ஆமான்டா ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க” என்று எழ ஆரம்பிக்க, அவரின் கையைப் பிடித்து உட்கார வைத்தேன்.

“இப்போ என்ன அவசரம்… வீடு தெரிஞ்சிருச்சுல்ல… இன்னும் 2நாள் இருப்பேன். வந்து சாப்பிடுறேன். நான் கிளம்பணும், வெளிய ஃப்ரெண்டு வெயிட் பண்றான்.” என்று சொல்லியபடியே எழுந்தேன்.

இருவரும் வாசல் வரை வந்தார்கள். அத்தை வாசற்கதவருகே வந்து நின்றுகொள்ள, மாமா என்னோடு அந்த காம்பவுண்டுக் கதவு வரை வந்தார்.

” பாப்பா எதுவும் பேசாம விசுக்குன்னு போயிடுச்சுன்னு எதும் நெனச்சுக்காதய்யா… சரியா, ”

“அட இதுல என்ன இருக்கு மாமா. நம்ம புள்ள”

சற்று யோசித்து ஒரு பெருமூச்சு விட்டபடி “நீ கவனிச்சது தெரியும்யா……. என்னத்தச் சொல்றது, ஒத்தைக்கு ஒருபுள்ளைன்னு ஒவ்வொண்ணா பாத்து செஞ்சு, கேட்டதெல்லாம் வாங்கிக்குடுத்து, இப்போ எதுவுமே சொல்லமுடியலய்யா. உன் அத்தை என்னைய திட்டமுடியாம, அவளையும் கண்டிக்கமுடியாம தெனமும் அழுகுறதப் பாக்க தாங்கலய்யா….”

“அட விடுங்க மாமா….”

ஏதேதோ சொல்லி சமாளித்துவிட்டு வந்தேன்.

வெளியே காத்துக்கொண்டிருந்த என் நண்பன் “டே நேரமாச்சு மாப்ள, படம் போட்ருவாய்ங்க”….

மாமாவை பார்த்துவிட்டு மதியம் சினிமாவுக்கு செல்வதுதான் எங்களின் காலைத்திட்டம்.அவசரமாக கண்ணில் தெரிந்த ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பைக்கில் பறந்தோம்.

மாமா வீட்டிலிருந்து தியேட்டர் சற்று தொலைவுதான். உள்ளே நாங்கள் நுழையவும் சினிமா துவங்கவும் சரியாக இருந்தது.

இடைவேளையின்போது எழுந்து வெளியே சென்றுவிட்டு உள்ளே நுழைந்து சுற்றிலும் பார்த்தேன்.தியேட்டரில் கூட்டம் மிகக் குறைவுதான். ஆனால் அங்கே இன்னொரு காட்சியும் எனக்கு பார்க்கக் கிடைத்தது.

நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு இரண்டு இருக்கைகளுக்கு முன் ஓரத்தில் அதே ஜீன்ஸ்பேண்ட் டி-சர்ட் பெண், ஒரு வாலிபனுடன் மிக நெருக்கமாக அமர்ந்திருந்தாள்.

நடந்தவைகளை என் நண்பனிடம் சுருக்கமாகச் சொன்னேன். “விடு விடு.. அப்படித்தான் எல்லாம்” என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்னான். படம் முடியும் முன்னே எழுந்து வெளியே வந்து கிளம்பிவிட்டோம்.

அதற்கு ஒரு காரணமும் உண்டு.

சிறு வயது முதல் எனக்கு ஒரு குணம். எனக்கு வேண்டிய அல்லது தெரிந்த குடும்பத்துப் பெண்களை அல்லது ஆண்களை , வேறோரு தெரியாத நபருடன் பொது இடங்களிலோ அல்லது இப்படி சினிமா தியேட்டரிலோ நிலையில் பார்க்க நேர்ந்தால், கூடியமட்டும் அவர்களின் பார்வையில் விழாமல் தப்பித்து அந்த இடத்தை விட்டு சென்றுவிடுவேன்.

அடுத்தமுறைவர்களை சந்திக்கும்போது அந்த நிகழ்வைப் பற்றி அவர்களிடம் கேட்கவும் மாட்டேன். அப்படி கேட்டு அவர்களை தர்ம சங்கடத்தில் நெளியச் செய்வதை மிக மிக அநாகரீகமாகக் கருதுவேன்.

சரி…. மேலே குறிப்பிட்ட சம்பவம், சமீப காலமாக நம் எல்லோரது வாழ்வில் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு வடிவங்களில் அனுபவித்த ஒன்றாக இருக்கும்… இதற்கு உங்களின் பதில் “இல்லை” என்றால் நீங்கள் கொடுத்துவைத்தவர்கள்…

முந்தைய அத்தியாயத்தில் நான் குறிப்பிட்ட “நடத்தை”, அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லாததன் விளைவுதான் மேற்சொன்ன சம்பவம்…

இது சம்பந்தப்பட்ட வேறொரு வடிவம் சொல்கிறேன்…

என் நண்பன் ஒருவன் தன் 8 வயது மகன் சரியாக படிப்பதில்லை என்று என்று குறைபட்டுக்கொண்டான்.

“சரியா படிக்க மாட்டேன்ங்குறான். எது சொன்னாலும் அடம் புடிக்கிறான்”

“ஓ அப்படியா… எத்தனாவது ரேங்க் வாங்கினான்”

” 12 வது ரேங்க்…க்ரேடு சிஸ்டம்தான் இப்போ , ஆனா டோட்டலா அப்டி கேல்குலேட் பண்ணி அவங்க டீச்சர் சொன்னாங்க. பேரன்ட்ஸ் மீடிங்ல அப்டி சொன்னபோது எனக்கு வெக்கமாப்போச்சு. என்ன பண்றதுன்னே தெரியல”

“சரி … அந்த 1, 2, 3 ரேங்க் வாங்கின பசங்கள் கிட்ட போய் வாழ்த்து (congratulate) சொல்ல சொன்னியா உன் மகன?”

“எலேய் … என்னடா நீ , என் அப்பா கூட சொல்லித்தராத ஒரு விஷயத்த சொல்ற”…

அப்போதுதான் எனக்கு உறைத்தது. இது 3 தலைமுறைகள் தாண்டித் தொடரும் வியாதி என்று…

மகன் நன்றாகப் படிக்கவில்லை. சரி. பாடப் புத்தகங்களில் இருக்கும் எழுத்துக்களையோ எண்களையோ மனனம் செய்து, அல்லது கூட்டி பெருக்கி வகுத்து ஒரு தீர்வை எட்டுவது தெரியவில்லை. அல்லது புரியவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஒரு விஷயம் மட்டுமே அந்தக் குழந்தையை தகுதியற்ற குழந்தையாகச் செய்துவிடுமா?… கல்வி என்பதற்கும் கற்றல் என்பதற்கும் என்ன அர்த்தம்?

கல்வி அமைப்பைப் பற்றி எனக்குண்டான பார்வையை இதில் பேச ஆரம்பித்தால் அது வேறு திசைக்கு இட்டுச் செல்லும்.அது வேண்டாம்.

ஆனால் தன் சக மாணவனை வாழ்த்தும் மனப்பான்மை நம் குழந்தைகளுக்கு நாம் ஏன் கற்றுத்தர மறந்துவிட்டோம்? ஏனென்றால் நாமே அப்படி இல்லை என்பதுதான் நிதர்சனம்…

இதில் மிக நுட்பமான பகுதி என்னவென்றால், அதிகம் படித்தவர்கள்தான் இந்தத் தவறைச் செய்கிறார்கள். படிக்காத தன் பெற்றோரை விட தன் பிள்ளைகளை இன்னும் அக்கறையுடன் வளர்க்கிறேன் பேர்வழி என்று எண்ணும் மனப்பான்மைதான் இந்த நடத்தைச் சறுக்கலின் துவக்கம். அவர்கள் அதிகம் படித்தவர்களாயிற்றே…. அவர்கள் நினைப்பதுதானே சரி…

“என் அப்பாவுக்கு வேலையே இல்ல… எந்த கல்யாணம் கருமாதின்னாலும் மொத ஆளா போய் உக்காந்துகிட்டு… மானம் போகுது” என்று சொல்லும் படித்த மேதைகளைப் பார்த்திருக்கிறேன். எனக்கு ஒருபக்கம் சிரிப்புதான் வரும். அதேசமயம் அவ்வளவு உன்னத நடத்தையுடைய தந்தை இப்படி நகைப்புக்குள்ளாக்கப்படுவது இன்னொரு பக்கம் வேதனையாகவும் இருக்கும்.

“அப்போ அந்தக்காலத்து ஆளுங்களெல்லாம் நல்லவங்க. இப்போ இருக்குறவங்கெல்லாம் கெட்டவங்க.. அப்படித்தானே?”

இப்படி ஒரு கேள்வி வருவது இயல்புதான். கொஞ்சம் இதை நுட்பமாகப் பார்க்கலாம்.

நல்லவன் கெட்டவன் என்பது இயல்பு, அல்லது அவர்களை நாம் பார்க்கும் பார்வை. சரி, ஒரு வாதத்திற்கு இதை எடுத்துக்கொள்வோம். அப்போதும் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இருந்தார்கள். ஆனால் இந்த அடிப்படை “நடத்தை” என்பது அநேகமாக எல்லொரிடமும் இருந்தது.

“என்னதான் இருந்தாலும் அவன் வீடு தேடி வந்து பத்திரிக்கை வெச்சுட்டான். நம்ம செய்யவேண்டியதை செய்யாம இருந்தா நமக்கு மரியாதை இல்ல”….

“ஆயிரம்தான் இருக்கட்டும் அவனுக்கு நாம பத்திரிக்கை வைக்கிறதுதான் மரியாதை. நடந்தது எல்லாம் இப்ப பாக்குற நேரமில்ல. போய் வெச்சிட்டு வா”

“ஆயிரம்தான் பிரச்சனை இருந்தாலும் மொத வரிசையில வந்து நின்னு எல்லா மொறமையும் செஞ்சுட்டுப் போய்ட்டான் பாரு. பெரிய மனுசன்தான்டா அவன்”

“என்னதான் இத்தன வருஷம் பேசாம ஒதுங்கி இருந்தாலும், சாவுக்கு போய் நிக்காம இருக்குறது தப்பு. வா ஒரு எட்டு போய்ட்டு வருவோம். இனி எப்போ பாக்கப்போறோம் அவன”….

இந்த வார்த்தைகளை நம் சிறு பிராயத்தில் கேட்டிருப்போம்… நினைவிருக்கிறதா…?

இது தான் நடத்தை……!

(தொடர்கிறேன்)

About arrawinthyuwaraj

be happy and make others happy
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

16 Responses to நடத்தை – 2

  1. Priya சொல்கிறார்:

    ohh lovely arawinth.. … nidharsanamaana unmaii.. mmm .. what to say… great sharing !!

  2. தேனம்மைலெக்ஷ்மணன் சொல்கிறார்:

    மிக அருமை.. என்ன சொல்வது… எங்கேயும் இதுதான். சரியா சொல்லி இருக்கீங்க அரவிந்த்..:(

  3. vaduvur rama சொல்கிறார்:

    அருமை..யுவராஜ்..

  4. ranjani135 சொல்கிறார்:

    மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள். முந்தைய பகுதியையும் வாசிக்கிறேன்.
    பாராட்டுக்கள்!

  5. பாரதிபிரியை சொல்கிறார்:

    ungalin eluthu nadai nalla irukku arrawinth. samukathin meethaana purithalum parivum thavippum therikirathu. vaasikka nernthamaikku makizhkiren..vaalthukkal.

    • arrawinthyuwaraj சொல்கிறார்:

      நேரம் ஒதுக்கி வந்து வாசித்தமைக்கு மிக்க நன்றி பாரதிப் பிரியை…
      உங்களின் இந்த ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி…

  6. anuradha niketh சொல்கிறார்:

    nice..

  7. ranjani135 சொல்கிறார்:

    அன்புள்ள அரவிந்த்,
    follow my blog என்று ஒரு வசதி இருக்கும் டேஷ்போர்டில். அதை உங்கள் தளத்தில் காணும்படி போடுங்கள். இதனால் உங்கள் பதிவு எனக்கு மெயிலில் வந்துவிடும். ரீடரில் வந்தால் நான் போய் பார்த்தால்தான் தெரியும். அதனால் இந்த வேண்டுகோள்.

  8. ranjani135 சொல்கிறார்:

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அரவிந்த்!

  9. selvaraj சொல்கிறார்:

    ‘நடத்தை’ கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.வாழ்த்துக்கள், இன்னும் எழுதுங்கள்.

arrawinthyuwaraj -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி